வேறுபட்ட துறை பின்னணிகளிலிருந்து வந்த டிரேசியும் இக்பாலும் வெளிப்புற நடவடிக்கை துறையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். என்ன எதிர்பார்ப்பது என்பது குறித்து குறைந்த அளவிலான தகவல்களும் அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. புதிய முயற்சியில் இறங்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கை (ஓபிஎஸ்) பயிற்றுவிப்பாளர்களாக இருவரும் இணைந்தனர்.
"இளையர்களுடன் பணிபுரியும் வாய்ப்பைத் தந்தது"
திரு இக்பால் கான் தனது பத்தாண்டு கால பணி பயணத்தில் அடியெடுத்து வைத்த துறைகள் பல. தற்போது சிங்கப்பூர் வெளிப்புற நடவடிக்கை (ஓபிஎஸ்) பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்து வரும் அவர், இதற்கு முன், தீயணைப்பாளராக, நிகழ்வு நிர்வாகியாக, துணை இயக்க நிர்வாகியாக பல்வேறு பரிமாணங்களை மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தில், தன்னை வழிநடத்தி சீர்படுத்திய ஆசிரியர்களை நினைவில் வைத்திருந்தார் திரு இக்பால். அத்தகைய நல்ல தாக்கத்தை இளையர்களிடத்தில் ஏற்படுத்தும் அவரது அவாவுக்கு ஏற்ப அமைந்தது, ஓபிஎஸ்ஸின் பயிற்றுவிப்பாளர் பணி.
வெளிப்புற நடவடிக்கை துறை அளிக்கும் வேறுபட்ட வாய்ப்புகள் இத்துறையில் தனது ஆர்வத்தை கண்டறிந்த திரு இக்பாலின் மனதுக்கு நெருக்கமானவை. இளமையாக உணரவைக்கும் இளையர்களுடன் சிரித்து உரையாடி நற்பண்புகளை புகட்டுவது, காலையில் காணும் சூரிய உதயம், நீண்டதூர நடை பயணங்கள் என அவரை கவர்ந்துள்ள அங்கங்கள் பல. முழுக்க முழுக்க வெளிப்புற இயற்கை சூழலில் பயிற்சி மேற்கொண்டு மாணவர்களை வழிநடத்துவதில் அவர் இன்பம் காண்கிறார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பின் பல்கலைக்கழகம் சென்று இளங்கலை பட்டம் பெற்ற திரு இக்பால் வகுப்பறை தாண்டிய கல்வியை நம்பியே வேலைத்துறையில் கால் வைத்தவர். வகுப்பறை கல்வியையே ஆக முக்கியமாக கருதும் போக்கோ தற்போது அதிகரித்து வரும் நிலையில், வெளியிலும் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான ஏராளமான வாய்ப்புகள் உண்டு என்பதை உணர்த்துவதில் ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்கள் பங்காற்றுவதாக கூறினார் திரு இக்பால்.
ஓபிஎஸ் முகாமுக்குப் பல்வேறு பின்னணிகளிலிருந்து வருகின்றனர் மாணவர்கள். பலமுறை, ஒருவரை ஒருவர் இம்முகாம் மூலமே அவர்கள் தெரிந்துகொள்வர். பலர் வீட்டையும் குடும்பத்தையும் பிரிந்து இத்தனை நாள் இருந்திருக்கமாட்டார்கள். இவர்களுக்கு ஆதரவும் ஆறுதலும் அளிப்பது பயிற்றுவிப்பாளர்களின் முக்கிய கடமை. இம்முகாம் மூலம் கிட்டக்கூடிய கல்வியைப் பாடங்களாய் நேரடியாக புகட்டாமல், அதனை அணுகுவதற்கு பயிற்றுவிப்பாளர்கள் சரிவர வழிகாட்டவேண்டும்.
"கவனச்சிதறல்களுக்குக் காரணமாக இருக்கும் கைபேசி, கணினி முதலியவை இன்றி, வீட்டில் இருக்கும் வசதிகள் இன்றி, வாழ்நாள் முழுக்க நீடிக்கும் நினைவுகளை ஏற்படுத்திக் கொள்ள ஓபிஎஸ் முகாம் வழிவகுக்கிறது. எதிலும் எங்கும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாழ்நாள் கல்வியை இது மாணவர்களிடத்தில் மட்டுமின்றி, எங்களிடத்திலும் வலியுறுத்துகிறது," என்றார் 29 வயது திரு இக்பால் கான். இதனால், தான் வேலை மாறியதில் எவ்வித வருத்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு வாரமும் ஐந்து நாள் நீடிக்கும் கல்வி அமைச்சு-ஓபிஎஸ் முகாம் திட்டத்தை வழிநடத்துகின்றனர் ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்கள். எனவே, வாரத்தில் ஐந்து நாட்கள் வரை இவர்கள் ஓபிஎஸ் வளாகங்கள் ஒன்றில் தங்கியாக வேண்டும். இதுவே மாறுபட்ட, தனித்துவமான ஓர் அனுபவத்தை அளிப்பதாக கருதுகிறார் திரு இக்பால்.
உடற்பயிற்சியில் திரு இக்பாலுக்கு ஈடுபாடு உண்டு. ஆனால், பலதரப்பட்ட நில, நீர் நடவடிக்கைகளைக் கொண்டுள்ள ஓபிஎஸ்ஸுக்கு அவர் புதிது. முதன்முதலில் பயிற்றுவிப்பாளர் தேர்விற்கு அவர் வந்த சமயத்தில், காயாக் படகில் துடுப்பு வலிக்கத் தெரியாதது அவரின் கவலைகளில் ஒன்றாக இருந்தது.
ஓபிஎஸ்ஸின் அடிப்படை பயிற்றுவிப்பாளர் பயிற்சி திரு இக்பாலின் கவலைகளைப் போக்கியது. பயிற்றுவிப்பாளராக செவ்வனே பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அவருக்கு தேவைப்பட்ட திறன்களை இப்பயிற்சியின்மூலம் அவர் பெற்றுக்கொண்டார். அறிமுகமில்லாத வெளிப்புற நடவடிக்கைகளில் கைதேர்ந்தவராவதற்கான வாய்ப்புகளை ஓபிஎஸ் வழங்கும் காரணத்தினால், கவலை வேண்டாம்; மனமிருந்தால் போதும் என்றார் திரு இக்பால்.

