பொதுமக்களில் ஒருவரான ஆன் சி, சிங்கப்பூரில் உள்ள திடல்களில் ஏராளமான எலி பொந்துகள் இருப்பதை கவனித்தார். அங்கு வந்து உணவருந்துபவர்கள் விட்டுச்செல்லும் உணவு கழிவுகளும் குப்பைகளும் இச்சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்று அவருக்கு தோன்றியது. மக்கள் தங்களது குப்பைகளை சரியான முறையில் அப்புறப்படுத்தினால் இதை களையலாம் என்பது அவரின் எண்ணம்.
மற்றொருவரான சென் சியுசியா, கிட்டத்தட்ட அன்றாடமும் தமது அக்கம்பக்கத்தில் குப்பை பொறுக்கி சுத்தப்படுத்துகிறார். தமது வட்டாரத்தில் குப்பை குவிவது அதிகரிப்பதாக அவர் முறையிட்டார். ஒரு மணி நேரத்திலேயே மூன்றிலிருந்து ஐந்து பைகள் வரை குப்பையினால் நிரம்பி விடுகிறதாம்.
மார்ச் 18ஆம் தேதி அன்று, சாவ்பாவும் தேசியச் சுற்றுப்புற அமைப்பும் இணைந்து "எனது கடமையல்லவே? சிங்கப்பூரின் பொது சுகாதாரத்துக்காக இணைந்து உழைப்பது." எனும் நேரடி கலந்துரையாடலை நடத்தின. சிங்கப்பூரின் சமூக கட்டிறுக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நாடெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தின் ஓர் அங்கமாக இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு பே யாம் கெங், பொதுச் சுகாதார மன்ற உறுப்பினர் டாக்டர் ஃபூ சுவான் ஃபாங், எல்.எஸ் 2 ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் தலைமை இயக்க அதிகாரி டான் வெய் யிங், சூ-சி அறநிறுவனத்தின் நீடித்த நிலைத்தன்மை நிர்வாகி சூசன் டான் ஆகியோர் கலந்துரையாடலில் பேசினர். இவர்களுடன், பங்கேற்பாளர்கள் 70 பேர், சிங்கப்பூரின் பொது சுகாதாரத்துக்கு எதிரான இடையூறுகளைப் பற்றிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் ஆலோசித்தனர்.
2021ஆம் ஆண்டின் பொது சுகாதார நிறைவு ஆய்வு முடிவுகளை திரு பே குறிப்பிட்டார். இதன்படி, பொதுமக்களில் 73% சிங்கப்பூரை சுத்தமாக வைத்திருப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என நம்பினர். 2019ல் இந்த விகிதம் 58% ஆக இருந்தது.
பொது இடங்கள், வசதிகளின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் சரிபார்ப்பதில் அரசாங்கத்துக்கு பொறுப்பும் கடமையும் இருக்கும் அதே வேளையில், அரசாங்கத்தால் மட்டும் பொது சுகாதாரத்தை பேண முடியாது என்றும் அரசாங்கத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்றும் திரு பே விளக்கினார்.
தியோங் பாரு சந்தையில் துப்புரவாளராக பணிபுரியும் 81 வயது சியாவ் ஹுவெ கியாவ், ஒருமுறை மேசையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது பயன்படுத்தப்பட்ட டயப்பர் ஒன்றினை ஒரு வாடிக்கையாளர் தட்டுகளின்மீது வீசியதை அவர் நினைவுகூர்ந்தார். டயப்பரை குப்பைத்தொட்டியில் போடுமாறு அவர் வேண்டிக்கொண்டபோது அவ்வாடிக்கையாளர் தம்மை கண்டித்ததாகவும், தட்டுக்களைக் கழுவுவது உட்பட இதையும் கையாள்வது துப்புரவாளர்களின் பணியே என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
48 வயது துப்புரவாளர் சியா சியு கியென், வாடிக்கையாளர்களிடம் தட்டுக்களைத் திருப்பி வைக்க சொல்லி அன்பாக கேட்டுக்கொண்டாலும் சிலர் அதனை மறுத்து எதிர்த்து பேசுவதுண்டு என்று கூறினார்.
பெர்சே உணவு நிலையத்தில் பணிபுரியும் திருவாட்டி சியா, விலைகொடுத்து உண்ணும் சில வாடிக்கையாளர்கள் துப்புரவு பணிகளைத் துச்சமாக மதிப்பதைக் கண்டுள்ளார். துப்புரவாளர்கள் மென்மையானவர்களாக ஆகிவிட்டனர் என்றோ, அடக்கம் இல்லாமல் நடந்துகொள்கின்றனர் என்றோ வாடிக்கையாளர்கள் வசைபாடுவர். மேசைகளை சுத்தம் செய்வதோடு, கழிவுகளும் மெல்லிழைத்தாட்களும் சிதறிகிடக்கும் பொதுக் கழிவறைகளை நாள்தோறும் மூன்று முறை சுத்தம் செய்வதும் திருவாட்டி சியாவின் பணியாகும்.
துப்புரவாளர்களின் அனுபவங்களைக் கேட்டு, இச்சிக்கலைக் களைய அரசாங்கம் புது நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக திரு பே விளக்கினார். "அபராதம் விதிக்கப்படுவதோடு, குப்பை போடுவோருக்கு சைனாடவுன் போன்ற கூட்டமான இடங்களில் குப்பை பொறுக்குவது கட்டாயமாக்கப்படும். இதன் மூலம், பொது துப்பரவாளர்களின் கடுமையான உழைப்பு குறித்து அவர்கள் அறிவர்," என்றார் அவர்.
சிறு நிலபரப்பு கொண்டிருக்கும் போதிலும் சிங்கப்பூர் 52,700 துப்புரவாளர்களை பணியமர்த்தி உள்ளதாக டாக்டர் ஃபூ கூறினார். "நமது துப்புரவாளர்களில் சிலர் வெளிநாட்டு ஊழியர்கள். சிலர் நமது தாத்தா பாட்டியைப் போன்ற மூத்தோர். உங்களையும் என்னையும் போல அவர்களும் சிங்கப்பூரின் மக்கள்தொகையை சேர்ந்தோரே. அவர்களின் பணியை நாம் புரிந்துகொள்வது அவசியம்."
"குப்பை போடுவது சுலபம். அதை சுத்தப்படுத்துவதே கடினம். துப்புரவாளர்கள் குனிந்தும் ஆங்காங்கே ஓடியும் குப்பை பொறுக்கவேண்டும். மூத்த துப்புரவாளர்களுக்கு இது குறிப்பாக சவால்மிக்கது. நாம் குப்பைபோடுவதை நிறுத்தியே ஆகவேண்டும்," என்றார் டாக்டர் ஃபூ.
"அதிகாலையில் அயராது உழைக்கும் துப்புரவாளர்களினால் ஒவ்வொரு காலையும் மாசற்ற சூழலில் நமது நாட்களை தொடங்குகிறோம். ஒருவேளை நாட்டின் எல்லா துப்புரவாளர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டால், சிங்கப்பூர் பொது சுகாதாரத்தின் உண்மை நிலை அச்சமயம் அம்பலமாகும்," என்று திரு பே கூறினார்.
அண்மையில் பாரிஸில் கழிவு அகற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் 7,000 டன்னுக்கும் மேற்பட்ட குப்பை குவிந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி அன்று, சிங்கப்பூரின் பொதுச் சுகாதார மன்றம் எஸ்.ஜி சுகாதார நாள் நிகழ்வை நடத்தியது. அதன்கீழ், ஆர்ச்சர்ட் சாலை துப்புரவாளர்கள் இல்லாமல் இருந்த நேரத்தில், தொண்டூழியர்கள் ஒரு மணி நேரத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட குப்பைப் பைகளை நிரப்பினர். தங்களுக்காக எல்லாம் சுத்தமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட சிங்கப்பூரை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு தனிநபர்கள் தனிப்பட்ட அளவில் பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டியது.

