குறைவான ஊழியர் எண்ணிக்கை துப்புரவு துறை எதிர்நோக்கும் ஒரு சவாலென குறிப்பிட்டார் எல்.எஸ் 2 ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் தலைமை இயக்க அதிகாரி டான் வெய் யிங். கழிவறைகளைச் சுத்தப்படுத்தும்போது ஈரத் தரையில் வழுக்குவது போன்ற கூடுதலான சவால்களை மூத்த துப்புரவாளர்கள் தங்களின் பணியில் எதிர்நோக்குவதை முதலாளிகள் கருத்தில் கொண்டுள்ளனர்.
ஆனால், சமீப காலத்தில், துப்புரவுத் துறையில் தொழில்நுட்ப மாற்றங்களையும் சுத்தப்படுத்துவதில் உதவும் இயந்திரங்களின் பயன்பாட்டையும் ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகள் எடுத்துள்ளது என அவர் கூறினார். "பேராங்காடிகளில் இத்தகைய இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் துப்புரவாளர்களின் பணி எளிதாகியுள்ளது. நெருக்கமான இடங்களையும் பணியிடங்களையும் சுத்தப்படுத்தி சூழலின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கு இது வாய்ப்பளிக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
துப்புரவு மேற்பார்வையாளரான 65 வயது நேன்சி கோ, இந்த இயந்திரங்கள் கழிவறைகளில் இருக்கும் இடைவெளிகளிலிருந்து அழுக்கை அகற்றுவதற்கு உதவுவதாக பகிர்ந்துகொண்டார். கழிவறைகளை தூய்மைபடுத்துவதற்கு புது ஐ-மாப் இயந்திரத்தை பயன்படுத்த தமது ஊழியர்களுக்கு கற்று தந்ததன் பின்னர், திருவாட்டி கோ அதற்கான நல்ல வரவேற்பை பெற்றார்.
ஊழியர் ஈடுபாட்டையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதோடு, துப்புரவாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு இவை கை கொடுக்கின்றன. அதிக நேரத்துக்கு மண்டியிட்டும் அமர்ந்தும் அவர்கள் பணிபுரிய தேவையில்லை.
"தொடக்கத்தில், பல மூத்த துப்புரவாளர்கள் புது தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தயங்கினர். இயந்திரத்தை இயக்குவதற்கான திறன் இல்லை, அல்லது அதனை உடைத்துவிடக் கூடும் என்று அவர்கள் அஞ்சினர். ஆனால், அவற்றை பயன்படுத்தி பார்த்ததன் பின்னர், அது வசதியாக இருப்பதை பாராட்டினர்."
தொழில்நுட்ப மேம்பாடுகளை துப்புரவுத் துறையில் ஊக்குவிப்பதோடு, தேசியச் சுற்றுப்புற அமைப்பு துப்புரவுத் துறையுடன் இணைந்து உபகார சம்பளங்களையும் வழங்கி வருவதாக திரு பே குறிப்பிட்டார். ஊழியர் குறைபாட்டினை சமாளிப்பதற்கு இத்துறைக்கென புது ஊழியர்களை வளர்த்தெடுப்பது இதன் நோக்கம்.
இது குறித்து கூறுகையில், "துப்புரவுத் துறையில் மூத்தோரும் வெளிநாட்டு ஊழியர்களுமே இருக்கின்றனர் எனும் தவறான கருத்து பரவலாக உள்ளது. உபகார சம்பளங்களின்மூலம், இன்னும் கூடுதலான இளம் தலைமுறையினர் இத்துறையில் இணைவர் என்று நம்புகிறோம். இது இயந்திர இயக்கங்கள், நிர்வாகம் ஆகியவற்றில் இருக்கும் சவால்களை கையாள உதவும்."
முழுநேர தேசிய சேவையாளரான 23 வயது சைரஸ் எங் பூன் பிங் இத்தகையதோர் உபகார சம்பளத்தைப் பெற்றுள்ளார். பொறியியல் அறிவியலில் பட்டயப்படிப்பு மேற்கொண்ட அவர் தேசிய சேவை முடிந்து துப்புரவுத் துறை நிறுவனமான எல்.எஸ் 2 ஹோல்டிங்ஸ் லிமிடெட்டில் இணைய உள்ளார்.
"நிரலிடுதலின்மூலம் துப்புரவு இயந்திரங்களுக்கான கூடுதல் இயக்கங்களை உருவாக்க முடிந்தால், துப்புரவாளர்களின் ஆக்கத்தை என்னால் கூட்ட முடியும். அதில் அர்த்தம் காண்கிறேன்," என்றார் திரு எங்.
பொறியியலாளர்களும் பலதரப்பட்ட ஊழியர்களும் துப்புரவு இயந்திரங்களின் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், துப்புரவாளர்களின் தேவைகளைக் கவனித்து புரிந்துகொள்ளக் கூடிய, உற்பத்தி பொருள் மேம்பாட்டுக்கான கருத்து தெரிவிக்கும் இளம் தலைமுறையினரை துப்புரவுத்துறை ஈர்க்கவேண்டும் என்று டான் வெய் யிங் கூறினார். உதாரணத்துக்கு, இயந்திரத் திரையிலும் பொத்தான்களிலும் பெரிய எழுத்துக்கள், கூடுதலான மொழித் தெரிவுகள், வெவ்வேறு அளவிலான இயந்திரங்கள் ஆகியவை மூத்த ஊழியர்களின் பயன்பாட்டை எளிதாக்குபவை.

