குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கு ஏற்றாற்போல் இந்தக் கோயிலின் ஐந்தடுக்கு கோபுரம் ஃபோர்ட் கேனிங் மலையை கிழக்குமுகமாக நோக்குகிறது.
இதில் நான்குவிதமான கோடி பூதங்கள், அட்டதிக்கு பாலகர்கள், புராண சம்பவங்கள் உள்ளிட்டவை சிற்பங்களாக இடம்பெறுகின்றன.
கோபுரத்திற்குப் பின்னால் மூன்று கோயில் விமானங்கள் உள்ளன. தெண்டாயுதபாணி சந்நிதிக்கு மேல் உள்ள விமானம் 28 அடி உயரமானது.
விமானத்தின் கிழக்கில் தெண்டாயுதபாணி, மேற்கில் நரசிம்மர், வடக்கில் பிரம்மா, தெற்கில் தெட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன.
சிவபெருமான் சந்நிதிக்கு மேல் உள்ள 12 அடி விமானத்தின் கிழக்குப் பக்கத்தில் சோமாஸ்கந்த மூர்த்தி, மேற்கில் மகாவிஷ்ணு, வடக்கில் பிரம்மா, தெற்கில் தெட்சிணாமூர்த்தியின் சிற்பங்கள் உள்ளன.
மீனாட்சி அம்மன் சந்நிதிக்கு மேல் உள்ள 12 அடி விமானத்தின் கிழக்குப் பக்கத்தில் மீனாட்சியை சொக்கநாதருக்கு திருமால் கன்னிகாதானம் செய்தல், மேற்குப் பக்கத்தில் வைஷ்ணவி, வடக்குப் பக்கத்தில் பிராம்மி, தெற்குப் பக்கத்தில் மாகேஸ்வரி ஆகிய சிற்பங்கள் உள்ளன.
சிங்கப்பூரில் இந்தக் கோயிலுடன் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலும் இதுவரை மரபுடைமைச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் ஆகும்.
தெண்டாயுதபாணி கோயிலும் தேசிய மரபுடைமைச் சின்னமாக அறிவிக்கப்பட்டதால் எந்த வேலைப்பாடுகளைச் செய்தாலும் அதற்கு உரிய முன் அனுமதி தேவைப்படும்.
"தெளிவான வரைபடத்தைச் சமர்ப்பித்து தேசிய மரபுடைமைக் கழகத்தின் ஆலோசனைப்படி வேலைகளைச் செய்து வருகிறோம்," என்று கட்டடக் குழு உறுப்பினர் ச.வெங்கடாசலம், 54, தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
முதியோருக்கும் உடற்குறை உள்ளோருக்கும் வசதி அளிக்கும் விதமாக கோயிலின் இரண்டு பக்கங்களிலும் வழி அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

