வேலையைத் துவங்க எத்தனித்த போது அந்த இடமே எவ்வித சிறு சத்தமுமின்றி அமைதியில் போட்ட திறன்பேசியைப்போல் கிடந்தது. நான் ஒரு மரங்களின் மருத்துவர் என்று கூட வைத்துக் கொள்ளலாம்; அவ்வாறு சொல்லிக்கொள்வதில் எனக்கு தனி கர்வமும் உண்டு.
மரவளர்ப்பியல் (அர்போரி கல்ச்சர்) துறையில் பட்டம் பெற்று, இயற்கை வனப்புடைய நிலம் சார்ந்த துறையில் (லேண்ட்ஸ்கேப்) கடந்த 17 வருடங்களாக அர்போரிஸ்ட் (மரப் பாதுகாப்பு நிபுணர்) ஆக பணிபுரிகிறேன்.
சிறு வயது முதற்கொண்டு இயற்கையை நேசிக்கும் நான், குடியிருப்புப்பேட்டைகளில் உள்ள மரங்கள், சாலையோர மரங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள மரங்களை பாதுகாப்புக் கருதி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதித்து அறிக்கைகளை ஒப்படைப்பேன்.
இப்படித்தான் போன வாரம் கூட ஒரு காட்டிற்கு மரங்களை ஆய்வு செய்யச் சென்றபோது அங்கு அல்பீசியா, கருவேலம், இலவம், பாதாம் முதலிய மரங்கள் அடர்ந்து உயரமாக வளர்ந்து நின்றன.
காட்டிற்குள் நுழைந்ததும் 'கீச் கீச்' என்று ஆங்காங்கே கேட்ட பறவைகளின் கான இசைகள் மனத்தை மயக்கினாலும், அங்கு ஊர்ந்து சென்ற பாம்புகளும்பூச்சி வகைகளும் உள்ளுக்குள் பயத்தைத் தோற்றுவித்தன. அன்று வேலையிலிருந்து திரும்பியதும் என் கைகளில் உள்ள தடிப்புகளைப் பார்த்து என் மனைவி நான்சி உடனே,
"என்னங்க கையெல்லாம் இவ்வளவு தடிப்பா இருக்கே" எனப் பதறிப்போய் நுண்ணுயிர்க் கொல்லி எனப்படும் ஆண்டிபயாடிக் மருந்தைத் தடவிவிட்டாள். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதலைப் பரிமாறிக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவர்கள். எங்களுடைய இனிய வாழ்க்கை ஓங்கி செழித்து வளரும் மரங்களைப் போல உயர்ந்து விளங்கினாலும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் குழந்தைப்பேறு கிட்டாதது கிளைகள் இல்லாத தனிமரத்தைப் போலவே எங்களுக்குத் தோன்றியது.
ஆரம்ப காலத்தில் இருவரும் பார்க்காத மருத்துவர் இல்லை. செய்யாத வைத்தியமும் இல்லை. இருவரிடமும் எந்தக் குறையும் இல்லை என்பதே நாங்கள் பார்த்த அனைத்து மருத்துவர்களின் ஒருமித்த குரலாய்ப் போக, சில சிகிச்சைகளுக்கும் கூடப் பரிந்துரைக்கப்பட்டோம். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தாலும் வசதிகள் பெருகினாலும் சிலவற்றை விலை கொடுத்து வாங்க முடியாது என்பது எங்கள் வாழ்க்கையில் உண்மையாகிப் போனது. அதனால்தான் என்னவோ, பள்ளிகளில் மரங்களை சோதிக்க எப்போதாவது வரும்போது சில நேரங்களில் கண்ணுக்குத் தென்பட்ட பிள்ளைகளைக்கூட என் சொந்தப் பிள்ளையாக பாவித்து, மனத்திற்குள்ளேயே கற்பனைக் கோட்டையை கட்டிவிடுவேன்.
இன்று காலை என் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்து ஒரு பள்ளி உதவியை நாடியிருப்பதால் உடனே போகும்படி கூறினார்கள். யாரோ ஒரு வழிப்போக்கர் அங்குள்ள ஒரு பெரிய தூங்குமூஞ்சி மரம் பார்க்கவே ஆபத்தானதாக தோன்றுகிறது எனப் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் இன்று நான் வந்திருப்பது, 'அங் மோ கியோ' வட்டாரத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி. பள்ளியின் நுழைவாயில் கதவருகே நான் சோதிப்பதற்காக வந்த கம்பீரமான தோற்றமுடைய அந்த தூங்குமூஞ்சி மரம் என்னை வரவேற்றது. பொதுவாகவே தூங்குமூஞ்சி மரத்தின் அடிமரம் குட்டையாகவும், மேற்பகுதி குடை போல் பரந்தும் இருக்கும். அங்கிருந்த அந்த மரத்தில் ஆங்காங்கே இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்க, அது அந்தப் பள்ளிக்கே ஒரு தனி அழகைக் கொடுத்தது எனலாம். அதோடு மட்டுமல்லாமல் சுற்றும் முற்றும் திரும்பி அந்தப் பள்ளியை பார்வையினாலே அலசினேன். அங்கே கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ள விசாலமான பச்சைப்பசேல் என்ற தோட்டம் என்னை அதிகமாகக் கவர்ந்தது.
நினைவுகளின் ஊடே, அந்த மரத்தை மிகவும் நுணுக்கமாக அடிப்படை மதிப்பீடு செய்து கொண்டிருந்தேன். என் அனுபவத்தில் என்னால் மரத்தின் இலைகளைப் பார்த்தாலே அதன் ஆரோக்கியத்தை ஓரளவு கணக்கிடமுடியும். இருந்தாலும் சிங்கையைப் பொறுத்தவரையில் எங்குமே விதை போட்டு மரம் வளருவதில்லை. அதனால் பாதுகாப்புக் கருதி மிகவும் கவனமாகவே வேலையில் ஈடுபட்டு அறிக்கை தாக்கல் செய்வது என் வழக்கம். முதலில் அந்த தூங்குமூஞ்சி மரத்தின் கிளைகளைச் சோதிக்கும் பணியைத் துவங்கினேன்.
அதற்குள் மதிய உணவு இடைவேளை நெருங்க, பள்ளி மணியும் ஒலித்தது. அவ்வளவுதான், அமைதியில் கிடந்த தொலைபேசி உயிர்ப்பெற்று கிணுகிணுப்பதைப் போல பள்ளி முழுக்க மாணவர்களின் பேச்சுக் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. அப்போதுதான் அவளை முதன்முறையாகப் பார்த்தேன்.. சில மாணவர்கள் விளையாட்டுத் திடலிலும் மற்றும் சிலர் உணவங்காடியிலும் மொய்த்துக் கிடக்க அவள் மட்டும் சிட்டாய்ப் பறந்து என் கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ள பள்ளித் தோட்டத்திற்குள் நுழைந்தாள். மாநிறத்திற்கும் சற்று தூக்கலான நிறம், வட்டமான முகத்தில் சிறு முத்துப் போல் சில பருக்கள், நேர் வகிடு எடுத்துப் போடப்பட்ட குதிரைவால் பின்னல் என பார்ப்பதற்கே அழகாக இருந்தாள்.
அவள் முதலில் தன் மிருதுவான கைகளால் தோட்டத்தில் இருந்த செடிகளின் இலைகளை மெல்ல வருடிக்கொடுத்தாள். அப்போது அவளின் பளிங்குக் கண்கள் அந்த தோட்டத்தைச் சுற்றிலும் சுற்றுப் பயணிகள் போல் வலம் வந்துகொண்டிருந்த பட்டாம் பூச்சிகளோடு சேர்ந்து சுழன்றது. சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டு செடிகளோடு உறவாடியவள் பிறகுதான் என்னைக் கவனித்தாள். அவளுடைய அகலமான அந்த நெற்றியில் குழப்ப ரேகைகள் படர, தயங்கியவாறே மெல்ல என்னிடம் வந்து,
"ஹாய் அங்கிள்" என்றாள்.
"ஹாய்"
"இந்த மரத்துல என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?" என ஆர்வத்துடன் விசாரித்தாள்.
"மரம் ஆரோக்கியமா இருக்கான்னு பார்க்க வந்துருக்கேன்"
"ஏன் அங்கிள், பார்த்தா நல்லாத்தானே இருக்கு?"
"உடம்பு நமக்கு நல்லா இருக்கப்பவே பொது மருத்துவப் பரிசோதனை செஞ்சிக்கிறோம்ல, அதுபோலத்தான் இதுவும்," என்றேன் அவளுக்குப் புரியும்படி.
"ஓ..அப்படியா?" என்றவாறே என்னிடம் விடைபெற்று பள்ளிக்குள் சென்றாள்.
அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பினேன். அங்கு நான்சி மிகவும் சோர்வுடன் படுத்துக் கிடந்தாள். என்னை நிமிர்ந்து பார்த்த அவளின் கண்கள் கலங்கின. அருகில் சென்று அவளை நான் ஆதரவாய் அணைக்க, அந்த அணைப்பு அவளின் வலியை எனக்குள் கடத்திச் சென்றது. பாவம் அவள், மாதாமாதம் இந்தப் பிரச்சினை வேறு அவளைப் பாடாய்ப்படுத்துகிறது. சிகிச்சை காரணமாக நிறைய மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் மனவலியோடு இப்போது உடல் வலியும் அவளிடம் தஞ்சம் புகுந்துகொண்டது. அவள் தலையைக் கோதியபடியே,
"ஏதாவது சாப்பிட்டியா?" என்றேன். அவள் இல்லை என தலையசைக்க, பழச்சாறு பிழிந்து கொடுத்து அவளை குடிக்க வைத்தேன்.
அவளது கவனத்தை திசை திருப்ப எண்ணி அன்று பள்ளியில் பார்த்த சிறுமியைப் பற்றி அவளிடம் கூற, அதை முழுவதுமாகக் கேட்ட அவளோ, "நமக்கு குழந்தை பிறந்திருந்தால் அவள் வயதுதானே இருக்கும்?" எனக் கூறி கண்ணீர் வடித்தாள்.
"சரி, விடும்மா," என்றபடி அவளை நான் அமைதிப்படுத்த, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவள் பிறகு ஆயாசம் தீரக் கண்ணயர்ந்தாள்.
மறுநாள் காலை பள்ளியை நெருங்கியதும் நான் கண்ட காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அங்கு நேற்று நான் சந்தித்த அதே சிறுமி, அந்த தூங்குமூஞ்சி மரத்தை அவளுடைய இரு கைகளையும் சேர்த்து அணைத்தபடி அதனிடம் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அப்போது மரத்தில் ஏராளமான உணர்வுகள் தோன்றி, அது தன் இலைகளை அசைத்து மகிழ்ச்சியைத் தெரிவிப்பதை என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. நான் அருகில் சென்றதும் என்னைப் பார்த்தவள்,
"குட்மார்னிங் அங்கிள்!" என்றாள். நானும் பதிலுக்கு வாழ்த்திவிட்டு,
"வாட்ஸ் யுவர் நேம்?" என்றேன்.
"யாழினி" என்றவளிடம்,
"ஆமா, யாழினி மரத்துக்கிட்ட ஏதோ சொன்னமாதிரி இருந்திச்சே?"
"ஆல் இஸ் வெல்"ன்னு சொன்னேன் அங்கிள்".
யாழினியின் அந்த வார்த்தை என் மனத்திற்கும்கூட ஏதோ ஒரு வகையில் ஆறுதல் கொடுத்தது.
"மரம், செடின்னா யாழினிக்கு ரொம்ப பிரியமோ?"
"ஆமாம் அங்கிள், அதனாலதான் நான் பள்ளியில 'கிரீன் கிளப்' இணைப்பாட நடவடிக்கையில இருக்கேன். அதோ அங்கேத் தெரியுதே பள்ளித் தோட்டம், அது நானும் என் நண்பர்களும் சேர்ந்து உருவாக்கினது," என சொல்லச் சொல்ல அவள் கண்களுக்குள் அவ்வளவு பரவசம்.
"உங்களோட தோட்டம் ரொம்ப அழகாயிருக்கு," என்று நான் அவ்வாறு சொன்னவுடன் அவள் உச்சி குளிர்ந்து போனாள். அப்போது ஒலித்த பள்ளி மணிச் சத்தம் எங்கள் உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, "ஸீ யூ லேட்டர் அங்கிள்" என்றபடி பள்ளிக்குள் விரைந்தாள். என்னைப் போல் அர்போரிஸ்ட் பணியில் இருப்பவர்கள் ஒரு மரத்தை பரிசோதனைச் செய்யும்போது கிளைகள், தண்டு, வேர் என முதற்கட்ட சோதனை மேற்கொள்ள வேண்டும்.
மும்முரமாக பணியில் மூழ்கியிருந்த எனக்கு, நான்சியிடம் இருந்து உடல்நிலை சரியில்லை என்ற குறுஞ்செய்தி வர, அன்று மதியத்திற்கு மேல் வேலையிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு வீடு திரும்பிவிட்டேன்.
"வந்துட்டீங்களா?" என்ற நான்சியிடம்,
"ஆல் இஸ் வெல்" என்றேன்.
"என்னங்க சொல்றீங்க?" என்றவளிடம் யாழினியின் நம்பிக்கையைப் பற்றிக் கூறியதும் நான்சியிடம் கூட ஒரு தெளிவு பிறந்தது.
அடுத்த வாரம் பள்ளி விடுமுறை வந்தது. அமைதியான பள்ளியில் அன்று காலையில் நுழைந்த எனக்கு எங்கும் சிட்டுக் குருவிகளின் கீச்சொலிகள் மட்டுமே கேட்டன.
பிள்ளைகள் போகவர இல்லாமல் இருந்தது ஒரு வகையில் இடையூறின்றி வேலை பார்க்க ஏதுவாக இருந்தாலும் யாழினியைப் பார்க்காதது சற்று ஏமாற்றமாகவே இருந்தது.
ஒருநாள் அந்தி சாயும் வரை வேலை நீண்டது. அப்போது அந்த மரம் அதன் இலைகளை கீழ் நோக்கி தொங்கவிட்டு, அது தேக்கியதில் மீதமிருக்கும் நீர்த்துளிகளை மழைச்சாரலைப்போல தனது எல்லைக்குள் தெளிக்க அங்குள்ள நிலப்பரப்போடு சேர்த்து அதில் நானும் குளிர்ந்து போனேன் எனலாம். ஆம், இத்தகைய சிறப்புத்தன்மை இந்த மரத்திற்கு இருப்பதால் இதற்கு மழைமரம் என்ற பெயரும்கூட உண்டு.
அந்த ஒரு வார விடுமுறைக் காலத்தில் மரத்தின் அனைத்துப் பாகங்கள் மற்றும் சுற்றியுள்ள மண் என எல்லாவற்றையும் மதிப்பீடு செய்ததில், மரத்தின் பலத்த தண்டுடைய பகுதியில் மட்டும் குறைபாடு இருக்குமோ என்ற ஐயம் என்னுள் எழுந்தது.
அதன்படியே அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க, அவர்கள் இரண்டாம் கட்ட பரிசோதனை செய்ய என்னை அறிவுறுத்தினார்கள்.
அடுத்து வந்த வாரத்தில் பள்ளி திரும்பவும் இயங்கத் தொடங்கியது. நானும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக சங்கிலிவாள், மரவெட்டி, பெரிய கத்தரிக்கோல் முதலிய கருவிகளோடு பள்ளிக்குச் சென்றேன். அன்று காலை தாமதமாக வேலைக்குச் சென்றதால் யாழினியைப் பார்க்க முடியவில்லை. மதிய உணவு இடைவேளையின்போது அவள் வழக்கம்போல் தோட்டத்திற்குச் சென்றுவிட்டு என்னைப் பார்க்க வந்தாள். அங்கு சுற்றியுள்ள கருவிகளை கண்டதும், "மரத்துக்கு என்னாச்சு அங்கிள்?" என்றாள் பதற்றத்துடன்.
"ஒரு சின்ன சந்தேகம், அதான் அடுத்த கட்டப் பரிசோதனை," என்றேன்.
அதைக் கேட்டதுதான் தாமதம், ஒருவிதப் பதற்றத்துடன், "அப்படின்னா ஏதும் பிரச்சினையா?" என்றாள்.
"அப்படியில்லை. நம்ப உடல் பரிசோதனையில மருத்துவருக்கு சிறு சந்தேகம் வந்தாகூட ஸ்கேன் பாப்பாருல்ல.. அதுபோலத்தான் இதுவும்" என அவள் போக்கிலேயே புரியும்படி விளக்கிய நான், அவளின் முக வாட்டத்தை மாற்ற முயன்றேன்.
"அதுசரி, உன் செடிகள் எல்லாம் எப்படி இருக்கு?"
"எது அங்கிள்? இங்கேயா? வீட்டுலேயா?"
"ஓ.. வீட்லகூட செடி இருக்கா?"
"எங்க குடியிருப்புக்குக் கீழே அனுமதியோடு 8 பேர் சேர்ந்து பெரிய தோட்டமே போட்டுருக்கோமே," என்று அவள் கூறியதும் எனக்குள் வியப்பு மேலிட்டது. இவளுடைய சின்னஞ்சிறு உலகத்தில் உள்ள இனிமையான பக்கங்கள் என் உள்ளத்தைக் கவர, அதை இன்னும் புரட்டிப் பார்க்கும் ஆவலில், "உனக்கு இந்த தோட்டக்கலையில எப்படி இவ்வளவு ஆர்வம் வந்துச்சின்னு தெரிஞ்சிக்கலாமா?" என வினவினேன்.
"ஊர்ல என்னோட தாத்தா நான் விடுமுறைக்குப் போகும் போதெல்லாம் என்னை அழைச்சிக்கிட்டுப் போயி அங்குள்ள மரங்கள், செடிகளை காமிச்சி அதைப் பத்தி நிறைய பயனுள்ள தகவல்கள் எல்லாம் சொல்லிக் கொடுப்பாரு... அதோடு இங்க கொஞ்சம் பாருங்களேன்," என்றபடி அவளுடைய திறன்பேசியை உயிர்ப்பித்து அதிலுள்ள படங்களை என்னிடம் காண்பித்தாள்.
அதைப் பார்த்த என் விழிகள் அகல விரிந்து எனக்குள்ளும் தூங்கிக் கிடந்த என் பால்ய நினைவுகளைத் தட்டிவிட்டது.
திறன்பேசியில் அவள் காட்டிய புகைப்படத்தில் நிறைய விதவிதமான மரங்கள், செடி கொடி வகைகள் என எல்லாவற்றையும் தன் பேத்தியோடு சேர்த்து படம் பிடித்திருந்தார் அவளின் பாசக்காரத் தாத்தா.
மேலும் யாழினி என்னிடம், "என்கிட்ட தாத்தா உலக வெப்பமயமாதல் குறித்தும் நிறைய பேசுவாரு..
அதைத் தடுக்க என்னால முடிஞ்ச ஒரு சிறு பங்காக செடி வளர்க்க ஆரம்பிச்சேன்.
இப்போ அதுவே எனக்கு பிடிச்ச பொழுதுபோக்கா மாறிப் போச்சு" என்றாள். அதைக் கேட்ட நான் வியந்து போய், "உங்க தாத்தா அறிவியல் ஆசிரியரா?" என்றேன்.
"இல்லை, அவர் ஒரு விவசாயி" என்ற அவளின் பதிலைக் கேட்டு வாயடைத்துப் போனேன். 'அப்ப இவளுக்குள் அவுங்க தாத்தா விதைச்ச விதைதான் இப்ப செடியா வளர்ந்துக்கிட்டு இருக்கு' என யோசித்த என்னை நினைவிற்கு மீட்டது அவளின் கேள்வி.
"அங்கிள், இதேபோல தூங்குமூஞ்சி மரம் எங்க தாத்தா வீட்டிற்கு பின்னாடி இருக்கு. நான் போன விடுமுறையில ஊருக்குப் போனப்ப அதுல பறவை கூடு கட்டியிருந்திச்சி."
"ஓ... அப்படியா?"
"அப்ப, இதுலையும் கூடு கட்டும்தானே அங்கிள்?" என்றாள் வாஞ்சையுடன்.
அவளின் அந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் தடுமாறினேன்.
என்னுடைய இத்தனை வருட பணி அனுபவத்தில் காட்டில் உள்ள மரங்களில் நிறைய சமயங்களிலும், குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள மரங்களில் எப்போதாவதும் கூடுகளைப் பார்த்ததுண்டே தவிர, எந்தப் பள்ளி மரங்களிலும் இதுவரை பறவைக் கூடு என் கண்களுக்குத் தென்பட்டதில்லை. இருந்தாலும் அவளுடைய விருப்பத்தை உடைக்க விரும்பாமல், "கட்டலாம்மா," என்றேன்.
அன்று இரவு நான்சியிடம் யாழினியைப் பற்றிப் பேசி பூரித்துப் போனேன். அவளும் இமை கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். நாட்கள் நகர்ந்தன. அடுத்தடுத்த நாட்களில் சிங்கப்பூரில் ஏற்பட்ட தொடர் மழையினால் இடையிடையே வேலைகள் தடைப்பட, பொதுவாக 2 வாரங்களில் முடியும் இம்மாதிரியான வேலை மேலும் சில நாட்கள் நீண்டன. பணி நிறைவடையும் அந்தநாளும் வந்தது. அன்றுதான் நான் யாழினியை கடைசியாகப் பார்த்தேன்.
அவள் பதற்றத்துடன் மரத்தின் மதிப்பீட்டைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் என்னைப் பார்க்க, "ஆல் இஸ் வெல்" என்று அவளின் மொழியிலேயே பதிலளித்தேன்.
அதைக் கேட்டதும், "தேங்கியூ அங்கிள்" என்றபடி மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து ஓடி மறைந்தாள்.
நான் கிளம்பத் தயாராகி மரத்தை ஒருமுறை தொட்டுப் பார்த்தேன்.
அப்போது அன்று மருத்துவமனை சென்றிருந்த நான்சியிடமிருந்து வந்த குறுஞ்செய்தி எனக்குள் இதமான தென்றலாய்த் தீண்டிச் செல்ல, மேலே நிமிர்ந்து பார்த்த என் கண்களில் ஓசனிச்சிட்டுப் பறவை அழகிய கூடு கட்டிக்கொண்டிருப்பது தென்பட்டது.
(குறிப்பு: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக முத்தமிழ் சிறுகதைப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற கதை)
நன்றி: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

