சிறுகதை
கி.சுப்பிரமணியம்
அது ஒரு சிறிய முடி திருத்தும் கடை. உள்ளே செல்வோருக்கு ஏதோ தமிழகத்தில் இருக்கும் ஒரு கடைக்குள் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தச் செய்யும்.
சுவரில், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், எம். ஜி. ஆர், கலைவாணர் போன்ற அரசியல் மற்றும் கலைத்துறை சார்ந்தோரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் எழுச்சி பெற்ற அறுபதுகளின் காலகட்டம் அது என்பதால், அதன் தாக்கம் சிங்கப்பூர், மலேசியா போன்ற கடல் கடந்த தமிழர்கள் வாழ்ந்த நாடுகளிலும் எதிரொலித்தது. அதன் எடுத்துக்காட்டின் தோற்றம்தான் இராமலிங்கத்தின் கடையில் காணும் காட்சி.
முப்பது வயது மதிக்கத்தக்க இராமலிங்கமும், அவரைவிட ஐந்து வயது இளையவரான அவரின் தம்பி சுப்பையாவும் கடையை நடத்தி வந்தனர். கூடவே ஐம்பது வயதைத் தாண்டிய முனியாண்டி என்ற உறவினர், உதவிக்கு இருந்தார். அவரை மாமா என்றே இருவரும் அழைத்தனர்.
ஆரம்பத்தில் இந்தக் கடையைத் தொடங்கிய இராமலிங்கத்தின் தந்தை, பின்பு முனியாண்டியை தமிழகத்திலிருந்து வரவழைத்துக்கொண்டார். இருவருமாக சில காலம் சேர்ந்தே உழைத்தனர். அதன்பின் முதலில் தமிழகத்திலிருந்து, இராமலிங்கத்தைதான் அழைத்து வந்தார் அவர் தந்தை.
சிங்கப்பூர் வந்த இராமலிங்கம், இங்கு தந்தைக்கு உதவியாக கடையில் இருந்தார். ஒரு வருடத்திற்குப்பின், இராமலிங்கம், தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளோடு கூடவே தம்பி சுப்பையாவையும் இங்கு அழைத்துக்கொண்டார்.
மகன்கள் இருவரும் தொழிலில் ஈடுபட்டபின், முனியாண்டியை அவர்களுக்குத் துணையாக வைத்துவிட்டு, தந்தை நிரந்தரமாக தமிழகம் திரும்பிவிட்டார். தொழில் அனுபவம் பெற்ற முனியாண்டியுடன் கடையை இராமலிங்கமும் சுப்பையாவும் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
முடிதிருத்த பலரும், இன, மொழி பேதம் பாராது இக்கடைக்கு வருகை புரிவர். தமிழர்களின் வருகையே அதிகம்.
கடைக்கு முடிதிருத்த வருபவர்கள், அமர்ந்து தங்களின் முறைக்கு காத்திருக்க நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். அவர்களின் காத்திருக்கும் நேரத்தை சோர்வின்றி போக்கிட, தமிழ் முரசு, தமிழ் நேசன் மற்றும் தமிழ் மலர் போன்ற நாளேடுகளும், சில ஆங்கில, மலாய் மற்றும் சீன இதழ்களும் வைக்கப்பட்டிருக்கும்.
வருகின்ற வாடிக்கையாளர்களில் பலர், கடையை நடத்துபவர்களுக்கு பழக்கப்பட்டவர்களாக இருப்பதால், மனம்விட்டு பலவற்றை பற்றி பேசிக்கொள்வார்கள். அவர்கள் பேச்சு அக்கம்பக்கத்தில் நடப்பவை பற்றியும், உள்ளூர் நாட்டு நடப்பைப் பற்றியும், மெல்ல தமிழக அரசியல் நிலை பற்றியுமாக இருக்கும்!
அந்தப் பேச்சில் அதிகம் கலந்துகொள்பவர் இராமலிங்கமும், முனியாண்டியும் மட்டுமே. குறைவாக பங்கிட்டு கொள்பவர் சுப்பையாதான். அரசியல் அதிகம் பேசமாட்டார். ஆனால் இலக்கிய ம் தொடர்பான பேச்சு வந்தால், கொஞ்சம் பேசுவார். அதுவும் பேசுகின்ற ஆளை பொருத்துதான். வீண் விவாதத்தை தவிர்ப்பார்.
தன் முறைக்காக காத்திருந்த பாவாடைசாமி, அன்றைய ஞாயிறு தமிழ் முரசைப் படித்தவண்ணம் பேசத் தொடங்கினார்.
'பாத்தீங்களா அண்ணே இன்னைக்கு வந்த ஞாயிறு முரசின் சங்கப் பலகை பகுதியை?' 'இலக்கிய கட்டுரைகள் அருமை!' என்று இராமலிங்கத்தை நோக்கிக் கேட்டார்.
'என் தம்பி சுப்பையாவைக் கேளுங்கள், அவனுக்குப் பிடித்த இலக்கிய பக்கம் அது. மிகவும் ஆர்வமாகப் படிப்பான். மற்ற பக்கங்களைவிட, இதையும் நல்ல சித்திரங்களோடு வரும் கவிதை பக்கமும்தான் அவனுக்குப் பிடித்தது,' என்று புன்முறுவலுடன் தன் தம்பியைப் பெருமிதத்துடன் பார்த்தவண்ணம் பதில் சொன்னார் இராமலிங்கம்.
"ஆமாம், தம்பி சுப்பையா நல்ல இலக்கியப் பற்றுள்ளவர். நிறைய படிக்கவும், எழுதவும் செய்வார்," என்று முனியாண்டியும் சேர்ந்து புகழ்ந்து பேசினார்.
பதில் ஏதும் சொல்லாது, வந்த ஒரு வாடிக்கையாளரின் முடியை திருத்திய வண்ணம், ஒரு குறுநகை மட்டும் சுப்பையாவின் உதடுகளில் தோன்றி மறைந்தன.
"பரவாலப்பா. நல்ல பழக்கம்தானே அது. என் வீட்டுப் பயலுக, எடுத்தவுடன் பத்திரிகையின் பின்பக்கத்தைத்தான் முதல்ல பார்பானுங்க," என்று பாவாடைசாமி சொல்லவும் எல்லோரும் லேசாக சிரித்தார்கள்.
"பின்பக்கத்தில் வரும் கவர்ச்சியான சினிமா நடிகர்களின் புகைப்படங்களுக்காகவும், திரைப்படச் செய்திகளுக்காகவும் நாளிதழை வாங்கும் இளையர்கள், எந்தக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் அண்ணே. மேலும் நாளிதழை விற்பனை செய்வதற்கான உத்தியில், இதுவும் ஒன்று," என்று பாவாடைசாமிக்கு தன் கருத்தை சொன்னார் இராமலிங்கம்.
ஆமாம் என்ற தோரணையில் தலையை மெல்ல அசைத்த வண்ணம் தொடர்ந்து நாளிதழில் மூழ்கினார் பாவாடைசாமி.
இப்படித்தான் ஒவ்வொரு நாளும், இதுபோன்ற கலகலப்பான பேச்சுகளோடு, தொழிலில் ஈடுபட்டவாறே பொழுதும் சுகமாக போகும்.
அவர்கள் பேசிக்கொண்டதுபோல் சுப்பையாவிற்குத் தமிழ்ப் பற்றும், இலக்கிய ஆர்வமும் உண்டு என்றபோதும், இவர் தமிழகத்தில் இருக்கும்போது குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலே நிறுத்திக்கொண்டார். அதை நினைத்து பிற்காலத்தில் மிகவும் வருந்தினார்.
தமிழின் மீது என்னதான் ஆர்வம் இருந்தபோதிலும், அது தன் மனநிறைவிற்கு மட்டுமாகத்தான் இருந்தது. பள்ளிச் சான்றிதழ் ஏதும் முறையாக இல்லாததால், இங்கு எந்தத் தமிழ் துறையிலும் சுப்பையாவால் எளிதில் வேலைக்குச் சேர முடியவில்லை. ஆயினும் கதை, கவிதை என நாளிதழ்களுக்கு அவ்வப்போது எழுதுவார்.
சில படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும், சில திரும்பிவிடும். ஆயினும் சுப்பையா நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பதையும் எழுதுவதையும் தொடர்ந்தார். ஆனால், இதையெல்லாம் மீறி அவர் உள்ளத்தில் தன் வருங்காலம் மற்றும் பொருளாதார உயர்வு பற்றிய சிந்தனையே மேலோங்கி நின்றது.
'இல்லானை இல்லாளும் வேண்டாள், மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள், செல்லாது அவன் வாயிற் சொல்' என்றாளே ஔவை. எவ்வளவு பெரிய உண்மை.
பொருளாதாரத்தில் உயர்ந்து, மக்களால் அடையாளம் கண்டுகொள்ளப்படுபவனின் எழுத்தை, பேச்சை, தடையின்றி உலகம் ஏற்றுக்கொள்கிறது. சிலரே அதற்கு விதிவிலக்கு என தோன்றிற்று சுப்பையாவிற்கு. ஆகவே முதலில் தன்னை பொருளாதாரத்தில் உயர்த்திக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தார்.
சிங்கப்பூர் வந்து சில ஆண்டுகள் ஆயினும், தொடர்ந்து தகப்பன் காலம்தொட்டு இதே முடிதிருத்தும் கடையில் ஈடுபட்டு வருவதை அவருக்கு சோர்வை ஏற்படுத்தியது. இது அந்த தொழில் மீது கொண்ட வெறுப்பினால் அல்ல. அதில் மேலும் வளர்ச்சியடைய முடியவில்லை என்ற எண்ணம்தான் காரணம்.
கடையில் வருகின்ற வருமானத்தில் அண்ணன் குடும்பத்தோடு தானும் பங்கிட்டு வாழ்வது, அண்ணனுக்கு எவ்வளவு சிரமம் உள்ளது என்பது சுப்பையாவிற்கு நன்றாகவே தெரிந்தது.
இந்த சிரமங்களைப் பற்றி அவர் அண்ணன் இராமலிங்கம் ஒருநாள்கூட முணுமுணுத்ததில்லை.
இந்த லட்சணத்தில் சுப்பையாவிற்கு தன் உறவுவழிப் பெண்ணை மணம் செய்துமுடிக்கவேண்டும் என்ற, ஊரில் இருக்கும் தன் தந்தையின் தொடர் கடிதங்களும், அதற்கு ஆமோதித்து தன் அண்ணனும் தன்னை நச்சரிப்பதும் சுப்பையாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
தான் எப்படியும் இங்கேயே வாழ்ந்து, உழைத்து, உள்ளூரிலேயே மணமுடித்து முன்னேறவேண்டும் என்ற வலுவான எண்ணம் சுப்பையாவைப் பற்றிக்கொண்டது.
ஒரு கடையோடு நின்று விடாது இன்னும் சில கிளைகள் ஏற்படுத்தி சிறந்த தொழிலதிபராக முன்னேறவேண்டும் என கனா காணுவார்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்றாரே வள்ளுவர், அதுவே சுப்பையாவை ஆட்கொண்டது. புது கிளை திறப்பது பற்றி தன் அண்ணனுடன் பேசியிருந்தாலும், இராமலிங்கத்திற்கு அதில் நம்பிக்கை இல்லை.
இதற்கெல்லாம் நிறைய பணம் தேவைப்படும் என்று சொல்லி மழுப்பி விடுவார்.
ஆயினும் சிங்கப்பூரை சார்ந்த மலாய்க்காரத் தொழில் அதிபர் ஒருவர், ஒரு முடிதிருத்தும் கடையைத் தொடங்கி, பின்பு பல கிளைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றதைப்போல் தானும் ஆகவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக சுப்பையாவின் உள்ளத்தில் புதைந்து கிடந்தது.
அதுவெல்லாம் சரிதான். ஆனால் தன் அண்ணன் இராமலிங்கம் சொன்னதுபோல், புதுப் கிளை திறப்பதற்கான முதலீட்டிற்கு வழி?
சிங்கப்பூர் அதிவேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்த காலம் அது. தொழில்துறையில் முன்னேறும் சிங்கப்பூரில் புதிய தொழிற்சாலைகள் உயர ஆரம்பித்தன. முதலீட்டை பெருக்கிக்கொள்ள, ஏதேனும் வேலையில் சேர்ந்து, சில காலம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார் சுப்பையா.
நன்றாக சிந்தித்துப் பார்க்கையில், இப்பொழுதுள்ள கடையை அண்ணனையும், முனியாண்டியையும் கொண்டே நடத்திவிடலாம் தானும் உடன் இருப்பது வீண் என்றே நினைத்தார். அதை தன் அண்ணனிடம் நேரடியாக சொல்லியும் விட்டார்.
"இரண்டு பேரைக் கொண்டே கடையை நடத்தலாம். நான் தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினால் நமது குடும்பச் சுமை குறையும், புதிய கிளை தொடங்க கொஞ்சம் முதலீட்டிற்கும் வழிபிறக்கும் அண்ணா," என மெல்ல எடுத்து சொன்னார் சுப்பையா.
"முடிதிருத்திப் பழக்கப்பட்ட நீ தொழிற்சாலையின் கடுமையான வேலையைத் தாங்க முடியுமா, வேண்டாம் அங்குபோய் கஷ்டப்படாதே சுப்பையா. பணக்கவலை உனக்கு வேண்டாம். இந்தக் கடையில் வரும் வருமானத்தை கொண்டு எல்லாவற்றையும் நான் கவனித்துக்கொள்கிறேன்," என்றார் சற்று கனிவுடன்.
இது தன் தம்பி மீது கொண்ட பாசத்தினால் வந்த சொற்கள் என்றபோதிலும், நிதிநிலையை அவர் உணராது இல்லை. என்னதான் கடையில் வருமானம் ஓரளவிற்கு வந்தபோதிலும், கடைக்கும் கடையோடு ஒட்டிய வீட்டிற்கு கொடுக்கும் வாடகையும், முனியாண்டிக்கு தரும் சம்பளத்தையும் கழித்தபின் வரும் மிச்ச வருவாயைக்கொண்டே சமாளித்து வரும் இராமலிங்கத்திற்கு அதன் சிரமத்தை உணர்ந்தாலும் அதைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டார்.
"அப்படி இல்லை அண்ணா எனக்கும் ஒரு மாற்றம் தேவை படுகிறது. கொஞ்ச காலம் தொழிற்சாலையில் வேலை செய்துபார்க்கிறேன். முடியவில்லையென்றால் விட்டுவிட்டு மீண்டும் கடையில் சேர்ந்து விடுகிறேன்,'' என்று அண்ணனை சமாதானப் படுத்தினார் சுப்பையா.
ஏதோ முடிவிற்கு வந்துவிட்டான் தம்பி என்பதை உணர்ந்த இராமலிங்கம்.
"சரி, இனியும் நான் சொல்லி நீ கேட்கப் போவதில்லை. ரொம்பவும் சிரமமில்லாத வேலை கிடைக்குமா என்று பார்," என்று தன் தம்பி மீது கொண்ட அக்கறையை வெளிப்படுத்தினார்.
தன் நண்பர் ஒருவரிடம் சொல்லிவைத்தபடி, அஹ்மாட் இப்ராகிம் சாலையில் உள்ள மர ஆலையொன்றில் சுப்பையாவிற்கு வேலை கிடைத்தது. நாளொன்றிற்கு நான்கு வெள்ளி சம்பளம். அதை மாதம் இருமுறையாக பிரித்துத் தந்தனர். மூன்று ஷிப்டு வேலை.
வெட்டப்பட்ட பெரிய மரத்தை இருபுறத்திலும் இயந்திரம் கொண்டு இறுக்கமாகப் பொருத்தி, நடுவில் கனமான நீண்ட இரும்புக் கத்தி போன்ற ஒன்றை இணைத்து, மரத்தைச் சுழற்றச் செய்து, சீவுவார்கள்! பார்க்க ஏதோ பென்சில் சீவும் பெரிய இயந்திரம்போல காட்சி தரும்.
ஒரே வேறுபாடு, இது முழு மரத்தின் தண்டைச் சீவும். சீவப்பட்ட மரத்தின் கரடுமுரடான புறத் தோல் பகுதிகள், அகலமான பெல்ட் போன்ற விரிப்பில் வந்துகொண்டே இருக்கும். அவை தேவையற்ற மரத்தின் பகுதிகள்! அவற்றை அந்த விரிப்பிலிருந்து விரைவாக இழுத்து வெளிக்கொணர்ந்து பெரிய இரும்புத் தொட்டி போன்ற ஒன்றில் தூக்கிப் போடவேண்டியது சுப்பையாவின் வேலை.
எட்டு மணிநேர வேலையில் உடல் களைத்துப் போகும் சுப்பையாவிற்கு. ஆயினும் விடாது உழைத்தார். வேகத்தில் வரும் மரப்பட்டைகள், சில சமயம் சுப்பையாவின் கைகளையும் உடம்பையும் பதம்பார்த்துவிடும். அவ்வப்போது ஏற்படும் காயங்களை முழுக்கை சட்டை போட்டு கொஞ்சம் மறைத்துக்கொள்வார். அண்ணனுக்குத் தெரிந்தால் மனம் புண்படுவார் என்பதற்காக.
மாதத்திற்கு இருமுறை வழங்கும் சம்பளத்தை அண்ணனிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து செலவிற்குக் கொஞ்சம் பணம் பெற்றுக்கொள்வார்.
இப்படியே ஆறு மாதம் ஓடி முடிந்தது. சுப்பையா கொண்டுவந்த பணத்தை தனியொரு கணக்கில் சேமித்து வைத்தார் இராமலிங்கம்.
கடையில் தலைகாட்டுவது குறைந்தது. அவ்வப்போது தமிழ் நூல்களைப் படிப்பதும், கவிதைகள் எழுதுவதும் தடைப்பட்டது சுப்பையாவிற்கு.
மிகவும் களைத்துப்போய் ஓர் இரவு வீடு திரும்பிய சுப்பையாவை வீதியில் கண்டுகொண்டார் முனியாண்டி.
"என்ன சுப்பையா, ரொம்ப களைத்துப்போய் வர்றியே. வேலை ரொம்ப கஷ்டமா?" என்று பரிவுடன் வினவினார்.
அவரே சுப்பையாவின் தோல்மீது கைபோட்டு, சாலையோர கல்லொன்றின் மீது அமரச்செய்தார்.
"ஆமாம் மாமா. கொஞ்சம் கடினம்தான். ஆனாலும் பரவாவில்லை சமாளிக்க முடிகிறது," என்று சமாதானம் சொன்னார் சுப்பையா.
"கடையில் அண்ணனின் நிலைமையை முன்னிட்டும், புதிய கிளை திறக்கும் ஆர்வத்திலும் "நீ கடுமையாக உழைத்து பணத்தைச் சேர்ப்பது, பாராட்டத்தக்க விஷயம் தான். ஆனாலும் நீ கடையில இல்லாத மனக்குறை உன் அண்ணன் முகத்துல நல்லா தெரியுது. அது இயற்கைதான் விடு.
"இனியும் எவ்வளவு நாள் இப்படி கஷ்டப்பட்டு உழைக்கப்போரே. நான் ஒன்று சொன்னால் அதைப்பற்றி கொஞ்சம் சிந்திப்பாயா?" என்று அந்த மங்கிய தெருவிளக்கில், சுப்பையா முகம் பார்த்துக் கேட்டார் முனியாண்டி.
"சொல்லுங்கள்,'' என்றார் சுப்பையா.
'உன் அண்ணனிடம் நான் பேசி இருக்கிறேன். உன் திருமணத்திற்காக அவர் சிறுகச்சிறுக பணம் சேர்த்து வைப்பதை பற்றி சொல்லியிருக்கிறார். அது ஒரு கணிசமான தொகைதான்! ஆகவே அந்தப் பணத்தை இன்னும் கொஞ்சம் பெருக்கி, நீ கொடுத்துவைத்த பணத்தையும் கொண்டு முதலில் உனக்கு தனியாக கடையொன்றை ஏற்பாடு செய்யலாம் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.
"தனியாகக் கடையை நல்ல முறையில் நடத்த ஆரம்பித்தபின், உன் திருமணம் பற்றி யோசிக்கலாம் என்றும் சொன்னதை அவர் ஒருவாறு ஏற்றுக்கொண்டார்," என்றார் முனியாண்டி.
இதைக் கேட்ட சுப்பையா ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டார்.
"இன்னொரு நல்ல செய்தி இருக்கிறது," என தொடர்ந்தார் முனியாண்டி.
"புக்கிட் தீமா ஏழாங் கல்லில் உன் அப்பாவிற்கு தெரிந்த பழைய நண்பர் ஒருவர் நம்மை போல முடிதிருத்தும் கடையொன்றை பல காலமாக நடத்தி வருகிறார். அவருக்கும் வயதாகிவிட்டது. கடையை யாருக்காவது விற்றுவிட்டு ஊருக்கு போகும் எண்ணத்தை என்னிடம் சொன்னார். என்னிடம் சொன்னதை உன் அண்ணனிடமும் சொன்னேன். அந்தக் கடைக்காரர் கேட்கும் தொகை கொஞ்சம் அதிகம்தான் என்ற போதிலும், அது நல்ல மக்கள் நடமாட்டம் கொண்ட பகுதி என்பதால் எடுத்து நடத்தினால் நல்ல பயன் தரும்," என்று விற்பவர் கேட்கும் தொகையையும் சொல்லி முடித்தார்.
இதைக்கேட்ட சுப்பையாவின் முகம் சற்று மலர்ந்த போதிலும்...
"ஆயினும் விற்பவர் கேட்கும் தொகையை நம்மால் சமாளிக்க இயலாதுபோல இருக்குதே மாமா," என்று சோர்வுடன் தலையைத் தாழ்த்தி பதில் சொன்னார் சுப்பையா.
சிறிது நேரம் அமைதி நிலவியது.
மீண்டும் முனியாண்டி பேச தொடங்கினார்.
'சுப்பையா, நான் உங்க அப்பா காலத்துல இருந்து உங்க கடையில வேலை செய்யுறேன். நான் திருமணம் ஏதும் செய்யல. ஊரில் என்னோட அம்மா இருந்தாங்க. அவங்களுக்குத்தான் கொஞ்சம் பணம் அனுப்பிக்கிட்டு இருந்தேன். அவங்க காலமானதும் அதுவும் நின்னுபோச்சு. அதுக்கப்புறம் நான் ஊருக்குப் போகல. போற விருப்பமும் இல்ல. அத விடு, என் கையில ஒரு இரண்டாயிரம் வெள்ளி சேமிப்புல இருக்கு. இந்தப் பணத்தையும் சேர்த்தா, அந்தக் கடைக்காரர் கேட்கும் பணத்தை நாம் கட்டிவிடலாம். அந்தக் கடையை நீ எடுத்து நடத்தலாம். என்ன சொல்லுற? என்று தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக சொன்னார் முனியாண்டி.
உறவினர் என்றாலும், எத்தனை பேருக்கு இந்த மனம் வரும்.
"வேண்டாம் மாமா. இது உங்கள் முதுமைக்காலத்திற்கான சேமிப்பு. இதை நான் கடைக்காக எடுத்துக்கொள்ள எனக்கு மனம் வரவில்லை," என்று சற்று உணர்ச்சிப் பெருக்குடன் மறுத்தார் சுப்பையா.
"அட, நீ அப்படி நினைக்க வேண்டாம். உங்க அப்பா என்னை நம்பித்தான் ஊருக்கு போனார். அதனால உங்க இரண்டு பேரோட கஷ்டநஷ்டத்துல எனக்கும் பங்கு இருக்கு. நீ இதைக் கடனாகவே எடுத்துக்க. கடை நல்லா நடக்கும்போது, மெல்ல, கொஞ்ச கொஞ்சமாக நீ திருப்பிக் கொடுக்கலாம்," என்று உரிமையுடன் எடுத்துச் சொன்னார் முனியாண்டி.
இதைக்கேட்ட சுப்பையா நன்றியுணர்ச்சியுடன் முனியாண்டியின் கைகளைப் பற்றிக்கொண்டு தன் நெகிழ்வை வெளிப்படுத்தினார்.
முனியான்டி மீண்டும் தொடர்ந்தார்.
"உன் அண்ணனிடம் இந்த பண விஷயத்தை பற்றி சொல்லிட்டேன். நாளைக்கு உனக்கு இரவு ஷிப்டு என்பதால் காலையில போய் ஒப்பந்தம் செய்துவிட்டு வரலாம் என்ன? என்று கூறி, சுப்பையாவின் பாசத்துடன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு இருவருமாக மெல்ல வீடு நோக்கி நடந்தனர்.
அன்று இரவு சுப்பையாவிற்கு தூக்கம் பிடிக்கவில்லை. இரவு வெகுநேரம், முனியாண்டியின் கைகொடுத்து உதவிய பெருந்தன்மை பற்றியும், தானும் ஒரு புதிய கடைக்கு முதலாளி ஆகப்போவதைப் பற்றியுமான சிந்தனையில் மூழ்கிக்கிடந்தது அவர் மனம்.
மறுநாள் மூவருமாக முனியாண்டி குறிப்பிட்ட கடையைப் பார்வையிட்டனர். அந்தக் கடையின் பராமரிப்பு அருமையாக இருந்ததோடல்லாமல் சுற்றமும் மக்கள் புழக்கமும் இருந்தது. இங்கும் தமிழர்கள் கணிசமாக வாழ்ந்து வந்தனர்.
உனக்குக் கடை பிடித்து இருக்கிறதா என்று இராமலிங்கம் தன் தம்பி சுப்பையாவை பார்த்து கேட்க, தன் ஒப்புதலை ஒரு புன்னகையுடன், ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்தினார் சுப்பையா. அதன்பின் முறையாக ஒப்பந்தப் படிவத்தில் எல்லோரும் கையொப்பமிட, கடை சுப்பையாவின் பெயருக்கு மாற்றப்பட்டது.
தான் செய்து வந்த தொழிற்சாலை வேலையிலிருந்து விலகி, தன் முழு நேரத்தை கடையில் செலவழித்தார் சுப்பையா. வாடிக்கையாளர்கள் அதிகரிக்கவே, நாளடைவில் கடை நல்ல இலாபத்தில் ஓடியது. இப்பொழுது, தனக்கு உதவ இன்னொருவரையும் வேலைக்கு அமர்த்திக்கொண்டார்.
நாட்கள் ஓடின. இப்பொழுதெல்லாம் படிக்கவும் எழுதவும் இரவில் நேரம் ஒதுக்கிக்கொள்வார் சுப்பையா. முனியாண்டி கொடுத்துதவிய பணத்தையும் மெல்ல திருப்பிக் கொடுத்தும்விட்டார். தன்னம்பிக்கை பிறந்தது. நிறைய எழுதினார். இப்பொழுது பலருக்கு அவரைப்பற்றி தெரியவருகிறது.
ஆகா! இதுவல்லவா வாழ்க்கை என்று உற்சாகப்பட்டுக்கொள்வார். அந்த உற்சாகத்திற்கு வேறொரு காரணமும் இருந்தது. தன் இலட்சிய பயணத்தின் முதல் படியாக மற்றோர் இடத்தில் இன்னும் ஒரு புதிய கிளையொன்றை திறக்கப்போகிறார் என்பதால்.
முற்றும்

