இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரானைச் சேர்ந்த தாரா கரெமனி என்ற பெண் இன்ஸ்டகிராமில் வெளியிட்ட அண்மைய காணொளிப் பதிவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அவர் 'ஜன கன மன' என தொடங்கும் இந்திய தேசிய கீதத்தை சந்தூர் என்ற இசைக்கருவியில் வாசிக்கும் காட்சி அந்தக் காணொளிப் பதிவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், அனைத்து இந்திய நண்பர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தாம் பல்வேறு இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்துள்ளதாகவும் அம்மக்களின் அன்பு நெகிழ வைத்ததாகவும் கூறியுள்ளார் தாரா கரெமனி.
"இந்திய மக்களின் அன்பைக் கண்டேன். அவர்கள் அனைவரும் கருணை உள்ளம் கொண்டவர்கள். எனவேதான் அவர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற்றுள்ளனர். அவர்களது வரவேற்புக்கு ஈடு இணையே இல்லை," என்கிறார் தாரா கரெமனி.
அவருக்கு ஏராளமான இந்தியர்கள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

