இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள அரசாங்க மருத்துவமனை ஒன்றில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கொவிட்-19 நோயாளிகள் இருவர் ஒரே படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 10,000க்கும் குறைவானோருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரு நாட்களாக அங்கு 200,000க்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகில் வேறெந்த நாட்டிலும் ஒரே நாளில் இத்தனைப் பேருக்குத் தொற்று பதிவானதில்லை.
இந்தியாவில் கொவிட்-19 சிகிச்சைக்காக பெரிய அளவில் வசதியுடைய லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு நாள்தோறும் நோயாளிகளுடன் அவசர மருத்துவ வாகனம் வந்த வண்ணம் உள்ளன. இதனால் அந்த மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

