புதுடெல்லி: இந்தியாவில் அண்மைக்காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இனி வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை 999 விமான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் கடந்த அக்டோபரில் மட்டும் 666 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல்களால் விமானச் சேவை முடக்கப்படுவது, தாமதப்படுவது போன்றவற்றால் பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
விமானத்திற்கு வெடிகுண்டு விடுக்கும் செயலை விளையாட்டாக செய்தாலும் உள்நோக்கத்துடன் செய்தாலும் அந்த நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட ரூ.3 கோடி வரை நட்டம் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்த அதிகமான அபராதம் விதிக்க வேண்டும். எனவே, மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்தில் இருந்து அதிகப்படியாக ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கமுடியும்.