புதுடெல்லி: மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட பத்துப் பேர் பத்து மணி நேரத்திற்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஓர் இரவுக் கேளிக்கை விடுதியில் நிகழ்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை 6.40 மணியளவில் இதுகுறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்ததாக ‘ஏஎன்ஐ’ செய்தி கூறியது.
அதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், மின்தூக்கியினுள் இருந்த பத்துப் பேரையும் பாதுகாப்பாக மீட்டனர் என்று டெல்லி தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் டுவிட்டர் வழியாகத் தெரிவித்தார்.
மீட்புப் பணிக்காகத் தீயணைப்புத் துறையினர் கட்டடத்தின் மேல்தளத்திலிருந்த பெரிய சன்னல் கண்ணாடியை உடைக்க வேண்டியதாயிற்று.
இரவுப்பொழுதில் நடந்த விருந்து நிகழ்ச்சிக்காக சென்றபோது அந்தப் பத்துப் பேரும் மின்தூக்கியினுள் சிக்கிக்கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து, சாவியைக்கொண்டு மின்தூக்கியைத் திறக்க முயன்றபோதும் அம்முயற்சி பயன் தரவில்லை என்று ‘இந்தியா டுடே’ செய்தி தெரிவித்தது.
அதன்பின், மின்தூக்கியினுள் மாட்டிக்கொண்டவர்கள் கேளிக்கை விடுதி நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள முயன்றும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இதனால் அவர்களில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட கேளிக்கை விடுதி பின்னிரவில் இயங்க உரிமம் பெற்றுள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரிக்க இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.