பெங்களூரு: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மங்களூருவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் முக்கியக் குற்றவாளிக்கு பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளியான முகமது ஷரீக் மீது 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு, கர்நாடக மாநிலம் மங்களூருவில் முகமது ஷரீக் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் கொண்டுசென்ற குக்கர் குண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில் முகமது ஷரீக் (24 வயது), ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தார்.
உடல் முழுவதும் தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முகமது ஷரீக். இந்த வழக்கில் தேசியப் புலனாய்வு முகவை விசாரணை மேற்கொண்டது.
முகமது ஷரீக்குக்கு பயங்கரவாதத் தொடர்புகள் இருப்பதாகச் சந்தேகித்த அதிகாரிகள் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்த என்ஐஏ அதிகாரிகள், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், முகமது ஷரீக் மீது 1,200 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இந்த வழக்கின் விசாரணை நீடித்தது.
இந்நிலையில், கூட்டுச்சதி, சேதம் விளைவித்தல், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் இழைத்ததற்காக பத்து ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

