புதுடெல்லி: இந்தியா முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வியாழக்கிழமை (மே 22) அன்று காணொளி வழியாக ரயில் நிலையங்களைத் திறந்து வைத்தார்.
ரயில்வேயில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில் 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து, காணொளி வழியாகத் திறந்து வைத்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பிகானீர்-மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்படி, தெற்கு ரயில்வேயில், சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ஆகிய 9 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.
வியாழக்கிழமை திறக்கப்பட்ட ரயில் நிலையங்களில் மின்படிக்கட்டுகள், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடை, பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள், ‘சிசிடிவி’ கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.