புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 15) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 11 பேர் மாண்டுபோயினர்.
அங்குள்ள ஒரு வண்ணச்சாயத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, பின்னர் இரு சேமிப்புக் கிடங்குகளுக்கும் போதையர் மறுவாழ்வு மையத்திற்கும் பரவியதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
தொழிற்சாலைக்குள் தீயில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. காவலர் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து மாலை 5.25 மணிக்குத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஆறு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. நான்கு மணி நேரத்திற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் சொன்னார்.
தீப்பற்றுமுன் தொழிற்சாலையிலிருந்து வெடிப்புச் சத்தம் கேட்டதாகக் கூறப்பட்டது. அதற்கு, ஆலையின் உள்ளே சேமித்து வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள்களே காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
“அருகிலிருந்த ஒரு வீட்டிற்கும் போதையர் மறுவாழ்வு மையத்திற்கும் தீ பரவியது. வெடிப்பு காரணமாக தொழிற்சாலைக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதனால், உள்ளிருந்த 11 தொழிலாளர்கள் உயிரிழக்க நேர்ந்தது. உடல்கள் முற்றிலுமாக எரிந்துபோனதால் அவர்களை அடையாளம் காண்பது சிரமமாகிவிட்டது,” என்று டெல்லி தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்தார்.
தீப்பற்றியதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்கிறது என்றும் அவர் கூறினார்.