புதுடெல்லி: டெல்லி சட்டமன்றக் கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
டெல்லி சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியது. மூன்று நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான திங்கட்கிழமை எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
இரண்டாம்நாள் கூட்டம் தொடங்கியதும் துணை நிலை ஆளுநர் விஜேந்தர் குப்தா உரையாற்றினார்.
அப்போது எதிர்கட்சி தலைவர் அதிஷி தலைமையில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
எச்சரிக்கையை மீறியும் போராட்டம் தொடர்ந்ததால், 11 எம்எல்ஏக்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த தலைமை கணக்குத் தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அவை சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து பாஜகவினர் திங்கட்கிழமை விளக்கமளித்திருந்தனர்.
முந்தைய ஆட்சியில் முதல்வர் இருக்கைக்கு பின்புறம் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் தற்போது முதல்வர் இருக்கைக்கு வலப்புறச் சுவரில் மாட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.