அமராவதி: ‘வாட்ஸ் - அப்’, இன்ஸ்டகிராம், ‘டெலிகிராம்’ போன்ற கைப்பேசி செயலிகளில் வரும் போலியான விளம்பரங்களை நம்பியும் முகவர்கள் மூலமும் தெற்காசிய நாடுகளில் வேலைக்குச் சென்ற இந்திய இளையர்கள் சீனாவைச் சேர்ந்த இணைய மோசடிக் கும்பலிடம் சிக்கியிருந்தனர்.
மியன்மார் நாட்டிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக இந்திய அரசு மீட்டது. அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 120 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
தெற்கு ஆசிய நாடுகளான மியன்மார், தாய்லாந்து, கம்போடியா,லாவோஸ் ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் போலி விளம்பரங்களை நம்பி இளையர்கள் சிலர், ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம்வரை செலவு செய்து, மிகுந்த கனவுகளோடு சென்றதாக ஆந்திர மாநில இணையக் குற்றப் பிரிவு காவல்துறை உயரதிகாரி எஸ்.பி. அதிராஜ் சிங் ரானா தெரிவித்தார்.
மேலும், முதலில் அந்த இளையர்கள் அனைவரும் தாய்லாந்துக்குச் சென்றதாகவும் அங்கு அவர்கள் சீன மோசடிக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமராவதியில் ஜனவரி 13ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
அவர்களை அக்கும்பல் கிடங்கு ஒன்றில் அடைத்து வைத்ததாகவும் பின்னர், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இளம் பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய போலி கணக்குகளைத் தயார் செய்யும் பணி அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அவற்றைச் சமூக ஊடகங்களில் உலவ விட்டு, அக்கணக்குகளுடன் அரட்டை அடிக்க விரும்பும் நபர்களை மோசடி வலையில் சிக்க வைத்து அவர்களிடம் பணம் பறிக்கவேண்டியது அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை என அதிகாரி தெரிவித்தார்.
மோசடிக் கும்பலிடம் சிக்கிய இளையர்கள் பெற்றோருக்குத் தகவல் அளித்ததால், இந்திய அரசு முயற்சி எடுத்து அவர்களை மீட்டுள்ளது.
இந்தியர்கள் மட்டுமன்றி, இலங்கை, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்குச் சிக்கியுள்ளனர். இதில் இந்தியர்கள் மட்டுமே சுமார் 10,000க்கும் அதிகமானவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

