புதுடெல்லி: கட்டாயப்படுத்தி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து, 13 வயது சிறுவனைப் பல மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்த அறுவர் கும்பலை போலிசார் கைது செய்தனர்.
டெல்லியில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றில் அச்சிறுவனை முன்பின் தெரியாத ஒருவன் சந்தித்தான்.
அச்சிறுவனுக்கு நடன வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்த அந்த ஆள், சொன்னவாறே சில வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தான்.
அதன்பின் ஒருநாள் கட்டாயப்படுத்தி போதை மருந்தைக் கொடுத்து, அச்சிறுவன் மயக்கமாக இருந்தபோது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாற்றினான்.
சிறுவன் பெண்போல் தோன்றுவதற்காக ஹார்மோன் மருந்துகளும் தரப்பட்டன. பின்னர் அந்த ஆளும் அவனது நண்பர்களும் சேர்ந்து சிறுவனைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர்.
அத்துடன், பாலியல் தொழிலிலும் அவன் தள்ளப்பட்டதோடு, சாலைகளில் பிச்சை எடுக்கவும் வைக்கப்பட்டான்.
தங்களுக்கு எதிராக எதுவும் செய்தால் சிறுவனையும் அவனுடைய குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக அக்கும்பல் மிரட்டியது.
இந்நிலையில், சிறுவனின் நண்பனையும் அக்கும்பல் தங்களின் இருப்பிடத்திற்குக் கடத்தி வந்தது. இதனிடையே, கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தி நண்பனுடன் சேர்ந்து தப்பிய சிறுவன், தன் தாயிடம் வந்து சேர்ந்தான்.
ஆனாலும், அவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த காமுகர் கூட்டம், அச்சிறுவனின் குடும்பத்தினரையே கடத்திச் சென்றனர். பின்னர் சிறுவனின் நண்பனையும் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகச் சொல்லப்பட்டது.
சில நாள்களுக்குப் பின் அங்கிருந்து தப்பிய சிறுவர் இருவரும் டெல்லி ரயில் நிலையத்தில் ஒருநாள் முழுவதும் மறைந்திருந்தனர். அவர்களைக் கண்ட வழக்கறிஞர் ஒருவர் விவரம் கேட்டறிந்து, டெல்லி மகளிர் ஆணையத்திற்கு அழைத்துச் சென்றார்.
இதைத் தொடர்ந்து, அந்த சிறுவர் கும்பலைக் கைது செய்த போலிஸ் அவர்கள்மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

