பெங்களூரு: பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு மண்டல அதிகாரிகள் விரைந்து சென்று விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கவுகாத்தியில் இருந்து பெங்களூரு விமானத்தில் வந்த இரு இளம்பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அவர்களின் பெட்டியில் வழக்கத்துக்கு மாறாக 40க்கும் மேற்பட்ட சோப்புகள் இருந்தன. அவற்றின் உறையைப் பிரித்துச் சோதித்தபோது, வெள்ளை நிறப் பொடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதித்துப் பார்த்ததில் கொக்கைன் போதைப் பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 7.5 கிலோ கொக்கைன் போதைப்பொருள் அந்த இரு பெண்களின் உடைமைகளில் சிக்கியது.
அந்தப் பெண்களைக் கைது செய்த அதிகாரிகள், கொக்கைன் போதைப்பொருளை உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட போதைப்பொருளின் அனைத்துலகச் சந்தை மதிப்பு சுமார் ரூ.14.69 கோடி என அதிகாரிகள் கூறினர்.
கைது செய்யப்பட்ட 24 வயதுப் பெண் மணிப்பூரைச் சேர்ந்தவர் எனவும் 26 வயதான பெண் மிசோரமைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இருவர் மீதும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏறத்தாழ 15 கோடி ரூபாய் அளவுக்குப் போதைப்பொருளைக் கடத்தி வந்தவர்களின் பின்னணியில் உள்ளது யார் என்பது விசாரணைக்குப் பின் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.

