அமராவதி: ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக்கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி என மொத்தம் 20 பொருள்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.
பெட்லூரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அண்மையில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அதையடுத்து, அவர் நரசாராவுப்பேட்டை பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது வயிற்றுக்குள் ஏராளமான பொருள்கள் சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மருத்துவக் குழுவினர், ‘லேப்ராஸ்கோபி’ சிகிச்சை மூலம் அனைத்துப் பொருள்களையும் அகற்றினர்.
உணவு அல்லாத பொருள்களை உண்ணத் தூண்டும் ‘பைகா சிண்ட்ரோம்’ (Pica Syndrome) என்ற மனநலம் சார்ந்த பாதிப்பு காரணமாக அப்பெண் அவற்றை விழுங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
தற்போது அப்பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


