சென்னை: கர்நாடக வணிக வரித்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) வெளியிட்ட தகவலின்படி, ரூ. 1,464 கோடி மதிப்பிலான போலி ரசீது மோசடியில் ஈடுபட்ட கும்பலைக் கைது செய்துள்ளது.
இது தொடர்பாகக் கர்நாடகாவில் இருவரும் தமிழ்நாட்டில் இருவரும் என மொத்தம் நான்கு பேரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பொருள் மற்றும் சேவை வரி தொடர்பான சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள்குறித்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் பெங்களூரு, சென்னை, வேலூர் மற்றும் பேரணாம்பட்டு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டதாகக் கர்நாடக வணிக வரித்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக வணிக வரித்துறை குறிப்பிட்டுள்ளபடி, இந்த மோசடிக் கும்பல் சிமெண்ட், இரும்பு, மற்றும் இதர கட்டடப் பொருள்களைப் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வாங்கியது மற்றும் விற்பனை செய்தது போல ரூ. 1,464 கோடிக்கு மோசடிப் பரிவர்த்தனைகளை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம், உண்மையில் சரக்குகள் எதையும் நகர்த்தாமலேயே, உள்ளீட்டு வரி வரவு பலன்களைத் தவறாகப் பெற்று மோசடி செய்துள்ளனர்.
இந்தச் சோதனையின்போது 24 கைப்பேசிகள், 51 சிம் அட்டைகள், பல வங்கிக் கணக்கு அறிக்கைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் ரப்பர் ஸ்டாம்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கையின்போது, தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்களான இர்பாஸ் அகமது, நபீஸ் அகமது ஆகியோர் பேரணாம்பட்டில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ‘டிரையன் டிரேடர்ஸ்’, ‘வொண்டர் டிரேடர்ஸ்’ போன்ற பல போலி நிறுவனங்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பெங்களூரில் பல போலி நிறுவனங்களை உருவாக்கியதாகக் கூறப்படும் எட்டாலா பிரதாப் மற்றும் ரேவதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பெங்களூருவில் உள்ள பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

