புதுடெல்லி: தற்காப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு காலப் பெருந்திட்டத்தை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் நீர்மூழ்கி கப்பல்கள், அடுத்த தலைமுறைக்கான பீரங்கிகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், அதிநவீன குண்டுகளை வீசும் டுரோன்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் செயல்படும் ஆயுதங்கள், விண்வெளி சார்ந்த போர் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மிகப்பெரிய பாதுகாப்புத் துறை மேம்பாட்டுக்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை மத்திய பாதுகாப்பு அமைச்சு தொடங்கியுள்ளது.
புதிய திட்டத்தின்படி டி-72 பீரங்கிகளுக்கு பதில் ராணுவத்தில் கூடுதலாக 1,800 அடுத்த தலைமுறை பீரங்கிகள் இணைக்கப்படும். மலைப் பகுதிகளில் போரிட 400 இலகு ரக பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், 700 ரோபோட்டிக் தாக்குதல் ஆயுதங்கள் ராணுவத்துக்கு கிடைக்கும்.
கப்பற்படையில் புதிதாக விமானம் தாங்கி போர்க் கப்பல் இணைக்கப்படும். அத்துடன் அடுத்த தலைமுறைக்கான 10 போர்க் கப்பல்கள், அதிவிரைவாக செல்லும் சிறிய ரக போர்க் கப்பல்கள், செயற்கைக் கோள்கள், 150 தாக்குதல் டுரோன்கள், தொலை இயக்கி (ரிமோட்) கருவி மூலம் இயக்கப்படும் 100 சிறிய ரக விமானங்களைக் கப்பற்படை பெறும்.
எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுத உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது என்று திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.