ஷார்ஜா: பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பரிசுச்சீட்டு வாங்கி வந்தவருக்கு, ஒருவழியாக அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது.
ஷார்ஜாவில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இந்தியரான விபீஸ் பள்ளியாளி என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி. அவருக்கு பத்துக் கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக பரிசுச் சீட்டுகளை வாங்கிவந்துள்ளார் விபீஸ். ஆனால் ஒருமுறைகூட பரிசு கிடைத்ததில்லை.
ஒவ்வொரு மாதமும் தன் ஊதியத்தில் கணிசமான பகுதியை இதற்காக விபீஸ் செலவிடுவதும் அவரது மனைவியிடம் திட்டு வாங்குவதும் வழக்கமாகிப்போனது.
இந்நிலையில், தனது நண்பர்கள் இருவர் மற்றும் உறவினர் ஒருவருடன் சேர்ந்து கூட்டாக ஒரு பரிசுச்சீட்டை வாங்கியுள்ளார் விபீஸ்.
அண்மையில் ஒரு நாள் பரிசுச்சீட்டு நிறுவனத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது, வழக்கம்போல் பரிசுச்சீட்டு வாங்குவதற்கான அழைப்பு என்று விபீஸ் நினைத்துள்ளார்.
ஆனால், அவர் கூட்டாக வாங்கிய பரிசுச்சீட்டுக்கு மில்லியன் கணக்கில் பரிசு கிடைத்திருப்பதை அறிந்தபோது திக்குமுக்காடிப் போனார்.
கூட்டாக வாங்கிய பரிசுச்சீட்டு என்பதால் விபீஸ் பள்ளியாளியின் பங்காக ரூ.10 கோடி கிடைக்கும். இந்தத் தொகையைக் கொண்டு நாடுதிரும்ப வேண்டும் பெங்களூரில் படிக்கும் தங்கள் மகள் வந்தனா பெயரில் சொத்து வாங்க வேண்டும என்றும் திட்டமிட்டுள்ளாராம் விபீஸ்.

