சிறைக்கைதிகளுக்குப் பானிபூரி, பனிக்கூழ்!

சிறைக்கைதிகளுக்குப் பானிபூரி, பனிக்கூழ்!

1 mins read
bc51a545-8c00-4ce0-8c25-2d30243fa92b
சிறைச்சாலைச் சிற்றுண்டியகங்களில் பனிக்கூழ், பானிபூரி உள்ளிட்ட மேலும் பல உணவுப்பொருள்களை விற்க மகாராஷ்டிர மாநிலச் சிறைத்துறை அனுமதியளித்துள்ளது. - படங்கள்:
Google News Preferred Icon

மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இனி சிறைக்குள்ளேயே பானிபூரியையும் பனிக்கூழையும் சுவைக்க முடியும்.

மகாராஷ்டிர மாநிலச் சிறைத்துறை, அங்குள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் சிற்றுண்டியகங்களில் விற்கப்படும் பொருள்களின் பட்டியலைப் புதுப்பித்துள்ளது.

அதன்படி, சிறைச்சாலைச் சிற்றுண்டியகங்களில் விற்கப்படும் பொருள்களின் பட்டியலில் மேலும் 173 பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஊறுகாய், இளநீர், காப்பித்தூள், பனிக்கூழ், பானிபூரி, கடலைமிட்டாய், ஓட்ஸ், இயற்கை உரமிட்டு விளைவிக்கப்பட்ட பழங்கள் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

டி-சட்டைகள், அரைக்கால் சட்டைகள், சதுரங்கப் பலகை உள்ளிட்டனவும் முகம் அலசும் களிம்பு, தலைச்சாயம் போன்ற அழகுப்பொருள்களும் இனி அங்கு விற்கப்படும். புகையிலை, நிக்கோட்டின் சார்ந்த மாத்திரைகளை விற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மகாராஷ்டிர சிறைத்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் அமிதாப் குப்தா கூறுகையில், “கட்டுப்பாடுகளால் மனநிலை மாறலாம். கைதிகளைத் திருத்துவதற்கு அவர்கள் நல்ல மனநிலையுடன் இருப்பது முக்கியம். அதனால், அவர்களுக்கான ஊட்டச்சத்துத் தெரிவுகளை விரிவுபடுத்துவதன் மூலம் அவர்களது நல்வாழ்வில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்