ஹைதராபாத்: தெலுங்கானாவில் அரசுப் பொறியாளரிடம் இருந்து ஒரு ‘வில்லா’ எனப்படும் ஆடம்பர பங்களா, 19 காலி மனைகள், மூன்று கட்டடங்கள், இரண்டு சொகுசு கார்கள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை ஊழல் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தெலுங்கானாவின் நீர்ப்பாசன மேம்பாட்டுத் துறையின் நிர்வாகப் பொறியாளராக நூனே ஸ்ரீதர் என்ற பொறியாளர் பணியாற்றி வருகிறார். அரசின் பல முக்கிய நீர்ப்பாசன திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை இவர் மேற்கொண்டுள்ளார்.
காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம், மெடிகட்டா தடுப்பணைகள் கட்டியது ஆகியவற்றில் ஸ்ரீதரின் பங்கு முக்கியமானது.
அரசுப் பொறியாளர் என்பதால், பலதரப்பட்ட பணிகளை இவர் மேற்கொண்டு வந்தார். வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்ததையடுத்து, ஸ்ரீதர் மீது மாநில ஊழல் தடுப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அவரது வீடு, அலுவலகம், உறவினர்களின் வீடுகள் மற்றும் ஸ்ரீதருக்குச் சொந்தமான 13 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவுக் காவல்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர். ஹைதராபாத், கரீம்நகர், வாராங்கல் உட்பட முக்கிய நகரங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
சோதனைகளின் முடிவில், ஒரு வில்லா எனப்படும் ஆடம்பர பங்களா, 19 காலி மனைகள், 16 விவசாய நிலங்கள், மூன்று கட்டடங்கள், இரண்டு சொகுசு கார்கள், தங்கம் - வெள்ளி நகைகள், ஏராளமான வங்கிக் கணக்குகள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
லஞ்சம் மற்றும் முறைகேடு வாயிலாகவே சொத்துகளை நூனே ஸ்ரீதர் குவித்துள்ளதாகக் கூறிய அதிகாரிகள், அதன் மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனர். ஸ்ரீதர் மற்றும் அவரின் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.