குருகிராம்: இந்தியாவின் ஹரியானா மாநிலம், குருகிராமில் போக்குவரத்து விதிகளை மீறி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து இவ்வாண்டு மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.1.9 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, போக்குவரத்து இணை ஆணையர் பிரதீக் கெலாட் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தலைக்கவசம் அணியாத 19,603 வாகன ஓட்டிகள்மீது போக்குவரத்துக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
விபத்துகளின்போது ஏற்படும் உயிரிழப்புகளுக்குத் தலைக்கவசம் அணியாததே முக்கியக் காரணம் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், மெட்ரோ ரயில் நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், முக்கியச் சந்திப்புகளில் போக்குவரத்து விதிகள் குறித்துத் தீவிர விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், ‘சிறுவர்களிடம் வாகனங்களைக் கொடுக்காதீர்கள்’ எனப் பெற்றோர்களுக்கும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வரும் மாதங்களிலும் இந்தத் தீவிரக் கண்காணிப்பு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

