புதுடெல்லி: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், சிம்மாச்சலத்தில் உள்ள ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தன உற்சவத்தில் இறைவனின் நிஜரூப தரிசனத்தைக் காண புதன்கிழமை அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர்.
இரவு முழுவதும் பெய்த பலத்த மழை, காற்று காரணமாக கோயில் சுவர் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் ஏழு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
“கோயில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்,” என்று அவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியும் ஃபேஸ்புக் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“விசாகப்பட்டினம் ஸ்ரீ வராஹலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடந்த துயர விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கின்றது. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கோயில் மேற்கூரை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

