அமராவதி: திருப்பதி ஆலயம், கடந்த ஆட்சியில் 60 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யில் செய்த 20 கோடி லட்டுகளை விநியோகம் செய்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.
ஆந்திர சட்டமன்றத்தில் தற்போது வரவுசெலவுக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) நடந்த விவாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த அந்த விவாதத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் கலப்படம் உள்ள நெய்யை தெரிந்தே வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
“கலப்பட நெய் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்புக் குழு விசாரணையை நடத்தியது. விசாரணையில் அதிகாரிகள், ஊழியர்கள், நிபுணர்கள் என அனைவரும் சேர்ந்தே குற்றம் புரிந்தனர் என்பது தெரியவந்துள்ளது,” என்றார் திரு சந்திரபாபு.
“2019- 2024ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அரசாங்கம் கிட்டத்தட்ட 60 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யை வாங்கி உபயோகித்துள்ளது. இதில் ரூ.231.51 கோடி ஊழல் நடந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“லட்டு தயாரித்த நெய்யில் விலங்குகளின் கொழுப்பு, மீன் கொழுப்பு ஆகியவை கலந்திருப்பதாக நான் ஆதாரம் இல்லாமல் கூறவில்லை. தேசிய ஆய்வகம் கொடுத்த அறிக்கையை ஆதாரமாக கொண்டுதான் அதைச் சொல்கிறேன்,” என்றார் திரு சந்திரபாபு.
துணை முதல்வர் பவன் கல்யாண், “கலப்பட நெய் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்,” என்று சட்டமன்றத்தில் கூறினார்.

