சென்னை: சென்னையில் ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கொண்ட கும்பலை தூத்துக்குடி அருகே காவலர்கள் கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (70), விலையுயா்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா்.
மதுரையைச் சோ்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான 17 கேரட் வைர நகை விற்பனைக்கு உள்ளதாகவும் அதனை விற்பனை செய்து தரும்படியும் இடைத்தரகா்களை அணுகியுள்ளாா்.
இதையடுத்து வைரத்தை வாங்குவதற்காக, இடைத்தரகா்கள் தங்களுடன் ராஜன், விஜய், அருணாச்சலம் ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்திரசேகா் வீட்டுக்குச் சென்றுள்ளனா்.
அங்கு அவா் வைத்திருந்த 17 கேரட் வைர நகையை பரிசோதித்ததுடன், அதற்கு ரூ. 23 கோடி விலை பேசி உறுதியளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (04.05.2025) சந்திரசேகரை தொடா்புகொண்ட இடைத்தரகா்கள், நகை வாங்கும் நபா்கள் அதற்கான பணத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும், அதை சென்னை வடபழனியிலுள்ள தனியாா் ஹோட்டலில் வைத்து தருவதாகவும் கூறி, அங்குள்ள ஓர் அறைக்கு சந்திரசேகரை வரவைத்துள்ளனா்.
ஹோட்டலுக்கு தனது வளா்ப்பு மகளான ஜானகி (27) என்பவருடன் சென்றிருந்த சந்திரசேகா், குறிப்பிட்ட அறைக்கு தனியாக வைர நகையுடன் சென்றுள்ளாா்.
நீண்ட நேரமாகியும் சந்திரசேகா் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஜானகி, அறைக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு சந்திரசேகரின் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு, வைர நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து ஹோட்டல் நிா்வாகம் கொடுத்த தகவலின்படி, ஜானகி, அவரது நண்பா் சுப்பிரமணி, ஓட்டுநா் ஆகாஷ், இடைத்தரகா்களான ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் ஆகியோரிடம் தியாகராய நகா் காவலர்கள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் அருகே சுங்கச்சாவடியை கடக்க முயன்ற 4 பேரைத் தூத்துக்குடி காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.