புதுடெல்லி: புனேவைச் சேர்ந்த ‘பிஎன்ஜி ஜூவல்லர்ஸ்’ நகைக்கடை இந்தியா, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் 35 கிளைகளுடன் செயல்பட்டு வருவதாக அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்காவில் இயங்கி வந்த ‘பிஎன்ஜி ஜூவல்லர்ஸ்’ நகைக்கடையில் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
இந்தக் கடைக்குள் முகமூடி அணிந்த இருபது பேர் புகுந்து சில நிமிடங்களில் அதைக் காலி செய்துவிட்டுச் செல்கின்றனர். கடையில் ஒரே ஒரு பாதுகாவலர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் காணொளியை எக்ஸ் தளம் வெளியிட்டுள்ளது.
கலிபோர்னியாவின் சன்னிவேலில் உள்ள பிஎன்ஜி ஜூவல்லர்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் கொள்ளையர்கள் அனைவரும் முகமூடி அணிந்து, கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டு கடைக்குள் விரைந்து செல்வதைக் காட்டுகிறது.
கடையின் கண்ணாடிப் பெட்டிகளை சுத்தியலால் அடித்து நொறுக்கி நகைகளை தாங்கள் கொண்டு வந்த பைக்குள் அள்ளிப் போட்டுக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
சிசிடிவி காட்சிகளின்படி, முழு கொள்ளைச் சம்பவமும் மூன்று நிமிடங்களுக்கும் குறைவாகவே நீடித்ததாகத் தெரிகிறது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாகவும் மேலும் சந்தேக நபர்களை தேடி வருவதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன.

