குண்டூர்: இந்தியாவைச் சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டிற்குள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பருச்சூரி சக்ரதர் - ஸ்ரீலட்சுமி இணையர். இவர்களுடைய ஒரே மகன் பருச்சூரி அபிஜித், 20.
குழந்தைப் பருவத்திலேயே அபிஜித் கல்வியில் சிறந்து விளங்கினார்.
வெளிநாட்டில் சென்று மேற்கல்வி பயில வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால், தன் மகனை வெளிநாட்டிற்கு அனுப்புவதில் திருவாட்டி ஸ்ரீலட்சுமிக்கு விருப்பமில்லை. ஆயினும், மகனின் எதிர்காலம் கருதி அவர் பின்னர் ஒத்துக்கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியில் சேர இடம் கிடைத்ததால், அவர் அங்கு சென்று பயின்று வந்தார்.
இந்நிலையில், அபிஜித்தின் மடிக்கணினி, பணத்திற்கு ஆசைப்பட்டு அவரைக் கொன்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அதே வேளையில், பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே அபிஜித் கொலை செய்யப்பட்டதால் பல ஐயங்களைக் கிளப்பியுள்ளது. பல்கலைக்கழகத்தில் வேறு மாணவர்களுடன் அவருக்குப் பிரச்சினை இருந்திருக்குமோ என்ற கோணத்திலும் ஆராயப்படுகிறது.
உரிய நடைமுறைகளுக்குப் பிறகு அபிஜித்தின் உடல் குண்டூர் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.