ஜெயக்குமார்: உலக அளவில் பணக்கார குடும்பம் திமுகதான்

ஜெயக்குமார்: உலக அளவில் பணக்கார குடும்பம் திமுகதான்

2 mins read

சென்னை: அதிமுக எம்எல்ஏக் களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்தார். திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தனியார் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, ரூ.10 கோடி கொடுத்தால் ஒரு எம்எல்ஏ வெளி யேறுகிறார் என்றால் 10 எம்எல்ஏக் களுக்கு 100 கோடி ரூபாய் தேவை.

ஆனால், அந்த 100 கோடி எங்கு இருக்கிறது? அப்படி எங்களிடம் 100 கோடி ரூபாய் இருந்தால் ஒரே வாரத்தில் அதிமுகவின் 10 எம்எல்ஏக்களை எங்கள் பக்கம் இழுத்தாலே ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஆற்காடு வீரா சாமியின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரான டாக்டர் சேப்பனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம், அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசி னார். அப்போது, எங்களிடம் பணம் இருந்திருந்தால் அதிமுக எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கியிருப்போம் எனத் திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்திருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி யெழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், "உலக அளவில் பணக்கார குடும்ப வரிசையில் திமுகதான் முதலிடத் தில் உள்ளது. அந்தக் குடும்பத்தின் ஓர் அங்கமாகத்தான் ஆற்காடு வீராசாமி உள்ளார். அவர்களிடம் ரூ.100 கோடி மட்டுமல்ல, அதற்கும் அதிகமாகவே உள்ளது. ஆசியா விலேயே மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பம் திமுக குடும்பம். ஆகையால் அவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அந்தளவுக்கு அவர்களிடம் பணம் உள்ளது. ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் அவர்களிடம் விலை போக மாட்டார்கள்," என்றார்.