புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலைத்தளத்தில் இந்தியாவின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் புகழாரம் சூட்டியுள்ளார்.
அதில், “இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாகப் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டன. அதனால் இந்தியா மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. எனவே, 2025ஆம் ஆண்டு இந்தியாவின் ஆண்டாக நினைவுகூரப்படும்,” என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக உலகளவில் இந்தியா அங்கீகரிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும், இந்திய மக்களின் கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்க ஆற்றலால் இந்தியா உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகிறது என்று கூறினார்.
இந்தியாவை உலகம் இப்போது நம்பிக்கையுடன் பார்க்கிறது. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மூலம் முன்னேற்றத்தின் வேகம் துரிதப்படுத்தப்பட்ட விதத்தை பார்த்து வெளிநாட்டினர் நம்மைப் பாராட்டுகிறார்கள் என்று அவர் கூறினார்.
இந்தியா உயர்ந்த லட்சியத்துடன் திட்டங்களை விரைவாக நிறைவேற்றும் மாபெரும் மாற்றத்துடன் முன்னேறியுள்ளது. நாட்டு மக்கள் கண்ணியத்துடன் வாழவும், தொழில்துறைகள் வளரும் வகையில் நல்ல பல சீர்திருத்தங்களை நாடு கண்டுள்ளது என்றார்.
ஜிஎஸ்டி, தொழிலாளர் சட்டங்கள், வெளிநாட்டு முதலீடு, வரிவிதிப்பு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பலவற்றில் சீர்திருத்தங்களை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசின் சீர்திருத்தங்களால் சிறு வணிகர்கள், இளம் தொழில்நுட்ப நிபுணர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க மக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பலன் அடைந்து வருகின்றனர். மேலும், கல்வித்துறையில் நல்ல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய அணுசக்தித் துறை அபார வளர்ச்சியடையும் விதத்தில் அந்தத் துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் ஹைட்ரஜன் எரிசக்தி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், 2025ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 5% மற்றும் 18% என்ற இரு விகிதங்கள் மட்டும் அமல் செய்யப்பட்டு உள்ளன. இதனால் அனைத்து வீடுகளிலும் செலவுச் சுமை குறைந்திருக்கிறது. இதனால், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
2025ஆம் ஆண்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. வரி நடைமுறையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும், ஒரு வணிகத்தை எளிதாகத் தொடங்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்னணு, ‘ஆட்டோ மொபைல்’ உட்பட பல்வேறு துறைகளில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
பெண்கள், அமைப்பு சாரா தொழிலர்கள் ஆகியோரின் நலன்கள் பாதுகாக்கப்படும் வகையில், புதிதாக 4 தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

