திருமலை: அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக, அந்த மாநில அரசு 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலய நிர்வாகம், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் கோயில் கட்ட தீர்மானித்துள்ளது. அதற்காக நிலம் ஒதுக்குமாறு அசாம் மாநில அரசுக்கு ஆலய வாரியம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அசாம் அரசு கவுகாத்தியில், முன்னதாக 10.8 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. ஆனால், 25 ஏக்கர் நிலம் இருந்தால் கோயில் மிகவும் பிரம்மாண்டமாக கட்ட முடியும் என திருப்பதி ஏழுமலையான் ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அறங்காவலர் குழுத் தலைவர் பிஆர் நாயுடு தெரிவித்தார்.
அதையடுத்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு அசாம் மாநில முதல்வருக்கு அண்மையில், கடிதம் எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து கோயிலுக்காக தற்போது 25 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளதாக அசாம் மாநில அரசு உறுதி பட திருப்பதி ஏழுமலையான் ஆலய வாரியத்திற்குக் கடிதம் எழுதி உள்ளது.
விரைவில் கவுகாத்தியில் ஏழுமலையான் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.

