போபால்: ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு நடுவே மறைந்து கொண்டு 250 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததாக கூறிய ஆடவரிடம் மத்தியப் பிரதேச காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்குள்ள ஜபல்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் வழக்கம்போல் ரயில் பெட்டிகளின் கீழே கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பெட்டியின் கீழே சக்கரங்களுக்கு நடுவில் ஒருவர் மறைந்திருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு ரயில்வே காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையின் போது, பயணச்சீட்டு வாங்க பணம் இல்லாததால் தாம் இடார்சி என்ற பகுதியில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் இவ்வாறு ரயிலுக்கு கீழே பயணம் செய்ததாக அவர் கூறினார். இதைக் கேட்டு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனெனில் அவர் ஏறக்குறைய நான்கு மணி நேரத்துக்கும் மேல் அவ்வாறு பயணம் செய்ய வேண்டி இருந்திருக்கும்.
இதற்கிடையே அந்த ஆடவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

