ஜெய்ப்பூர்: ‘மாரு திருவிழா’ என்று அழைக்கப்படும் பாலைவனத் திருவிழா இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மேரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 22) தொடங்கியது.
அங்குள்ள லட்சுமிநாதர் கோவிலில் இடம்பெற்ற வழிபாட்டுடன் அத்திருவிழா தொடங்கியது. உள்ளூர்வாசிகள் பாரம்பரிய, வண்ணமயமான ஆடைகளை அணிந்தபடி வலம் வந்த ‘ஷோபா யாத்திரை’யும் இடம்பெற்றது.
“ஒட்டகப் பந்தயம், போலோ பந்தயம், நீண்ட மீசைப் போட்டி, தலைப்பாகை அணியும் பந்தயம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பத்மஸ்ரீ விருதுபெற்ற அன்வர் கான், பெப்பே கான், சுவாதி மிஸ்ரா ஆகியோர் பங்குபெறும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்,” என்று சுற்றுலாத் துறை உதவி இயக்குநர் கிருஷ்ண குமார் தெரிவித்தார்.
திருவிழாவின் முதலிரு நாள்கள் ஜெய்சல்மேர் நகரிலும் மூன்றாம் நாள் ஜெய்சல்மேர் பாலைவனத்திலும் கொண்டாடப்படும்.
இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் அங்கு கொண்டாட்டம் களைகட்டுவதால் உள்ளூர், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இம்மாதத்தின் கடைசி வாரத்தில் ஜெய்ப்பூரில் பழமையான கார்களின் அணிவகுப்பிற்கும் ராஜஸ்தான் சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.