ஜான்சி: நீதி கோரி, காவல்துறையின் உதவியை நாடி காவல் நிலையத்திற்குச் சென்ற ஆடவரை விடாமல் அறைந்த காவல்துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சுதாகர் காஷ்யப் என்ற அந்த அதிகாரி 41 நொடிகளில் 31 முறை அந்த ஆடவரை அறைந்ததாகக் கூறப்படுகிறது. காஷ்யப் தம்மை அறைந்ததைத் தம் கைப்பேசியில் காணொளியாகப் பதிவுசெய்த அந்த ஆடவர், அதனை இணையத்தில் வெளியிட்டார்.
தான் காவல் நிலையத்திற்கு வந்த காரணம் குறித்து எதையுமே கேட்காமல், காஷ்யப் தம்மை மாறி மாறி அறைந்ததாக அந்த ஆடவர் தெரிவித்தார்.
“என்னை ஏன் அடிக்கிறீர்கள்?” என்று அவர் திரும்ப திரும்பக் கேட்பதைக் காணொளி மூலம் அறிய முடிகிறது.
அந்த ஆடவர் காவல் நிலையத்திற்கு ஏன் சென்றார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
அக்காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, காஷ்யப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணைக்குப்பின் அவர்மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.