சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதல் வழங்குவதற்கு ரூ.365.87 கோடி லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழகக் காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ (டிவிஎச்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் உட்படப் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி அமைச்சர் கே.என்.நேரு, அவர் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் வீடு, அலுவலகங்கள் என 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத் துறை சில நாள்களுக்கு முன்பு தமிழகக் காவல் துறையின் பொறுப்புத் தலைமை இயக்குநர் ஜி.வெங்கடராமனுக்கு 99 பக்கங்களைக் கொண்ட ஒரு கடிதத்தை அனுப்பியது.
அதில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் நகராட்சிப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிட மாறுதலுக்குக் குறைந்தபட்சம் ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர்கள் கைப்பேசியிலிருந்து 340 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர் நேரு தரப்பினர் ரூ.365.87 கோடி சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முக்கியமாக டிவிஎச் கட்டுமானம், வீட்டு மனை விற்பனைத் தொழில் மூலம் ரூ.223 கோடி, முதலீடுகள் வழியாக ரூ.36 கோடி, பினாமி நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி, தங்க முதலீடு வழியாக ரூ.2.33 கோடி, வெளிநாட்டுச் சொத்துகள் வழியாக ரூ.44 கோடி, ஆடம்பரச் செலவினங்களுக்கு ரூ.75 லட்சம் எனப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரூ.50 கோடிக்கு விடுதி வாங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 34 ஏக்கரில் சொத்து வாங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்குப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இது தொடர்பாகத் தமிழகக் காவல் துறையின் ஊழல் ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விசாரணையைத் தாமதம் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

