ஐந்து ஆண்டுகளில் 37,740 இந்திய ஊழியர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு

ஐந்து ஆண்டுகளில் 37,740 இந்திய ஊழியர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு

1 mins read
5ae3a80d-6674-4a29-ae78-ecfae3221b84
கீர்த்தி வர்தன் சிங். - கோப்புப்படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை 37,740ஆக உயர்ந்துள்ளது என இந்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்துள்ள பதிலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாள்தோறும் சராசரியாக 20க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் மாண்டுபோனதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் உயிரிழந்ததாகவும் மரணத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

“2021ஆம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 8,234 இந்திய ஊழியர்கள் வெளிநாடுகளில் மாண்டுபோயினர். இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 6,614ஆகக் குறைந்தது.

“பின்னர் ஆண்டுதோறும் உயிரிழப்புகள் சீராக அதிகரித்து, 2023இல் 7,291 ஆகவும் 2024இல் 7,747 ஆகவும் 2025இல் 7,854 ஆகவும் உயர்ந்துவிட்டன,” என்று இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியுள்ளார்.

மேலும், மொத்த உயிரிழப்புகளில் 86 விழுக்காட்டுக்கும் அதிகமானவை வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐக்கிய அரபு சிற்றரசுகள், சவூதி அரேபியாவில் முறையே 12,380, 11,757 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்