லக்னோ: சிறைக்கைதியைக் கடைத்தொகுதிக்குக் (Shopping Mall) கூட்டிச் சென்றதால் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவரும் காவலர்கள் மூவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது.
ஆயுதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ரிஷப் ராய் என்ற ஆடவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு உடல்நலம் குன்றியதை அடுத்து, இம்மாதம் 7ஆம் தேதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி, மருத்துவப் பரிசோதனை முடிந்ததும் காவலர்கள் ராயை நேராக சிறைக்குக் கொண்டுசென்று விட்டுவிட வேண்டும்.
ஆனால், மருத்துவமனையிலிருந்து திரும்பியபோது அக்காவலர்கள் ராயைக் கடைத்தொகுதிக்குக் கூட்டிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைத்தொகுதியில் ராய் இருந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர்மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.


