அனந்தபுரம்: ஆந்திர மாநிலத்தில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர்.
அந்த மாநிலத்தின் சத்ய சாய் மாவட்டம் மடக சிரா மண்டல் புல்ல சத்திரம் பகுதியில் அந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள குடி பண்டா மற்றும் அமரபுரம் பகுதியைச் சேர்ந்த 14 பக்தர்கள் வாடகை வேனில் திருப்பதிக்குச் சென்றனர்.
அங்கு ஏழுமலையானைத் தரிசித்து விட்டு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) இரவு வேனில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
மடக சிரா, புல்ல சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டு இருந்தபோது சாலையோரம் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண்டு இருந்தது.
பக்தர்கள் சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக திடீரென மோதியது.
இதில் வேனில் இருந்த 4 பக்தர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு இந்துபுரம் மற்றும் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அங்கு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை கூறியது.
விபத்து தொடர்பாக விசாரணை தொடர்கிறது.