புதுடெல்லி: காவல்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது டெல்லியில் பல்வேறு பகுதிகளில் 4,600 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 10 பேர் கைதாகினர்.
இந்தியா முழுவதும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஏதுவாக, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போதும் மற்ற நேரங்களிலும் பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தடை விதித்துள்ளது.
எனினும், இந்த உத்தரவை மீறும் வகையில், அண்டை மாநிலங்களில் இருந்து பட்டாசுகளை வரவழைக்கும் டெல்லி வியாபாரிகள், அவற்றை கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர்.
துர்கா பூஜா கொண்டாட்டம், தீபாவளிப் பண்டிகைக் காலம் என்பதால், பட்டாசு விற்பனை குறித்து காவல்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில், கடந்த மாதம் முதல் டெல்லி, அதன் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறையினர் தொடர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், ஒரே வீட்டில் இருந்து 3,500 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் கைதாகினர்.
இதேபோல் வேறு பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது மேலும் 1,100 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, எட்டு பேர் கைதாகியுள்ளனர்.
தீபாவளி வரை இந்தச் சோதனை நடவடிக்கை நீடிக்கும் என டெல்லி காவல்துறை தெரிவித்தது.