ஆக்கிரமிப்புகளுக்கு இடையே ‘உலக அதிசயம்’

ஆக்கிரமிப்புகளுக்கு இடையே ‘உலக அதிசயம்’

2 mins read
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் சட்டவிரோதமாக 470 கட்டடங்கள்
8234dcd5-d788-4c0e-b4d6-a5cb53e4b828
தாஜ்மகாலைச் சுற்றிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சட்ட விரோதமாக எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

ஆக்ரா: உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலைச் சுற்றிய நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகால், உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று.

அதிலிருந்து 500 மீட்டர் சுற்றுவட்டாரம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறியப்படுகிறது.

ஆயினும், உணவகங்கள், காப்பிக் கடைகள், வணிக நிலையங்கள் என, சட்டவிரோதமாக 470 கட்டடங்கள் அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் எழுப்பப்பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழகத்தைச் (ஏஎஸ்ஐ) சுட்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகள் பலமுறை புகார் அளித்தபோதும் அவற்றை அகற்றுவது தொடர்பில் பெரும்பான்மை வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொல்லியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

அந்தச் சட்டவிரோதக் கட்டுமானங்களை இடிப்பதற்கு உத்தரவிட தொல்லியல் ஆய்வுக் கழகத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், ஆக்ரா மேம்பாட்டு ஆணையம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் மட்டுமே அதனைச் செயல்படுத்த முடியும்.

பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான தாஜ்மகாலிலிருந்து 100 மீட்டர் முதல் 300 மீட்டர் சுற்றளவிற்குள், 2015-2022 காலகட்டத்தில் 248 புதிய கட்டடங்கள் முளைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வுக் கழக அறிக்கை குறிப்பிடுகிறது.

இன்னும் சில கட்டடங்கள், உலக மரபுடைமைத் தலமான தாஜ்மகாலிலிருந்து 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் வேறு கட்டுமானங்களை எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்லியல் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டப்படி, 200 மீட்டர் சுற்றளவிற்குள் வேறு கட்டுமானங்கள் இருக்கக்கூடாது.

இந்நிலையில், “இவ்விவகாரம் தொடர்பான விவரங்களை முழுமையாக ஆராய்வேன். தாஜ்மகாலையும் உரிய நினைவுச் சின்னங்களையும் சுற்றி, சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ள கட்டுமானங்களையும் ஆக்கிரமிப்புகளையும் உரிய காலத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று ஆக்ரா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ரீத்து மகேஸ்வரி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்