நடுநிலை தவறியதாக 5 உயர் காவல் அதிகாரிகள் இடைநீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

நடுநிலை தவறியதாக 5 உயர் காவல் அதிகாரிகள் இடைநீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

1 mins read
b9b42468-9f11-4cf2-a353-0278dfaa3df7
கோப்புப் படம்: - டெய்லிபய்னீர்.காம்

கோல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணியில் நடுநிலை தவறி செயல்பட்டதாக இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து காவல் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள அவசர கடிதத்தில், டயமண்ட் ஹார்பர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் கராய், துணை காவல் கண்காணிப்பாளர் சஜல் மோண்டல், டயமண்ட் ஹார்பர் காவல் நிலைய ஆய்வாளர் மவுசம் சக்கரவர்த்தி, ஃபால்டா காவல் நிலைய ஆய்வாளர் அஜய் பாக், உஸ்தி காவல் நிலைய அதிகாரி சுபேச்சா பாக் ஆகியோர்மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறைகளின்போது இவர்கள் கடும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுத் தேர்தல் ஆணையத்தின் நடுநிலை விதிகளுக்குக் களங்கம் விளைவித்ததாகவும் புகார்கள் குவிந்தன.

குறிப்பாக, தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறியது, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டது, தேர்தல் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாதது போன்ற காரணங்களால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஐந்து அதிகாரிகளையும் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறும், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் உயர் அதிகாரிகள் கூண்டோடு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்