பிரயாக்ராஜ்: பத்து டன் எடையும் 50 மீட்டர் உயரமும் கொண்ட கைப்பேசி கோபுரம் களவுபோன சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
கௌஷாம்பி மாவட்டத்திலுள்ள உஜ்ஜைனி எனும் சிற்றூரில் அக்கோபுரம் நிறுவப்பட்டிருந்தது.
ராஜேஷ் குமார் யாதவ் என்ற தொழில்நுட்பர் இதுகுறித்து நவம்பர் 29ஆம் தேதியன்று காவல்துறையிடம் புகாரளித்தார். அவர் தமது புகார் மனுவில் இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதியிலிருந்தே அக்கோபுரத்தைக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அக்கோபுரத்திலிருந்த அனைத்துப் பாகங்களின் மொத்த மதிப்பு ரூ.8.5 லட்சம் என்று ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அக்கோபுரம் நிறுவப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளரையும் உள்ளூர்வாசிகளையும் காவல்துறை விசாரித்தது.
இவ்வாண்டு ஜனவரியில்தான் அக்கோபுரம் உஜ்ஜைனியில் நிறுவப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனையடுத்து, மார்ச் 31ஆம் தேதி சோதனைப் பணிக்காக உஜ்ஜைனி சென்றபோது, அங்கு கைப்பேசி கோபுரம் இருந்ததற்கான தடமே இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஓராண்டிற்குமுன் பீகார் மாநிலத்தில் இரும்புப் பாலத்தையே கொள்ளையர்கள் பெயர்த்துக்கொண்டுபோனது குறிப்பிடத்தக்கது.