பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் 21 ஊழியர்களும் காய்ச்சல், இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கு ‘எச்1என்1’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு ஆகஸ்ட் 18 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்திற்கு வெளியே இயங்கும் சாலையோர உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவோருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பள்ளிக்கு வெளியே கொட்டப்படும் கழிவுகள் சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குவதாகவும் பள்ளி நிர்வாகம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
இதுகுறித்து கல்வியதிகாரி, மாநகராட்சி சுகாதார அதிகாரியிடம் புகார் அளித்துள்ள பள்ளி நிர்வாகம், பள்ளி வளாகத்திற்கு அருகே திறந்தவெளியில் சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.


