குஜராத்தில் ரூ.5,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்தில் ரூ.5,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
6bea0570-15d9-4c64-802a-97e527a34fe9
குஜராத்தின் ‘ஆவ்கார்’ மருந்து நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட கொக்கைன். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

அங்களேஸ்வர்: இந்தியாவின் குஜராத் மாநிலம், அங்களேஸ்வர் நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) இடம்பெற்ற அதிரடி நடவடிக்கையில் ரூ.5,000 மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அங்குள்ள ‘ஆவ்கார்’ மருந்து நிறுவனத்தில் டெல்லி காவல்துறையினரும் குஜராத் காவல்துறையினரும் இணைந்து அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 518 கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் சந்தை மதிப்பு 5,000 கோடி ரூபாய்க்குமேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.

அண்மையில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இரண்டு இடங்களில் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் 718 கிலோ கொக்கைன் சிக்கியது.

விசாரணையில், அந்தப் போதைப்பொருள் ‘ஃபார்மா சொலுஷன் சர்விசஸ்’ என்ற மருந்து நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதும் அது குஜராத்தின் ‘ஆவ்கார்’ நிறுவனத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

இவ்வழக்கில் இதுவரை 1,289 கிலோ கொக்கைனும் 40 கிலோ தாய்லாந்துக் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.13,000 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது. கைதானவர்களின் எண்ணிக்கையும் 12ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் ஒருவர் சென்னையில் பிடிபட்டது குறிப்பிட்டது.

மேலும், கைதானவர்களுக்கும் பிரிட்டனிலும் துபாயிலும் செயல்படும் அனைத்துலகப் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்