புதுடெல்லி: கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தேர்தல் செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறிய வேட்பாளர்கள் 529 பேரைத் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்கவோ போட்டியிடவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்து தமிழ் திசை இணையத்தளம் கூறுகிறது.
1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு ‘10ஏ’இன்கீழ் செலவுக் கணக்குகளை முறைப்படி தாக்கல் செய்யாத அந்த வேட்பாளர்கள்மீது தகுதி நீக்க நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
கடந்த மார்ச் 16ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின்படி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட நாடு முழுவதும் உள்ள சுயேச்சை வேட்பாளர்கள் 529 பேர் தங்களது அடிப்படைத் தேர்தல் உரிமைகளை இழக்கின்றனர்.
இந்தியச் சட்டத்தின்கீழ், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் தங்களது முழுமையான தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்வது கட்டாயம். அவ்வாறு செய்யத் தவறுவோரை மூன்று ஆண்டுகளுக்குத் தகுதி நீக்கம் செய்யத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
இந்தத் தகுதி நீக்கமானது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேநேரம், மாநிலத் தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கு இது பொருந்தாது.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 120 பேர், கர்நாடக மாநிலத்தில் 59 பேர், மத்தியப் பிரதேசத்தில் 39 பேர், சத்தீஸ்கரில் 36 பேர், தமிழ்நாட்டில் 33 பேர், பீகார் மாநிலத்தில் 28 பேர், தெலுங்கானா, பஞ்சாப், உத்தராகண்ட் ஆகியவற்றில் தலா 27 பேர், ஆந்திரப் பிரதேசத்தில் 25 பேர், கேரளாவில் 16 பேர் உட்படப் பல்வேறு மாநிலங்களின் சுயேச்சை வேட்பாளர்கள் தகுதி நீக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

