கோழிக்கோடு: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கேரள ஆடவர் ஒருவருக்கு 53 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நொச்சாடு முளியங்கள் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரைஹான் (வயது 41). தொழிலாளியான அவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விபத்தில் படுகாயம் அடைந்து ஓய்வு எடுத்து வந்தார்.
அவ்வேளையில் ஒருநாள், அருகிலிருந்த ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தனியாக இருந்த 13 வயதுச் சிறுமியை முகமது ரைஹான் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தகவல் பரவியது. அதனைத் தொடர்ந்து பேராம்பிரா காவல்நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் காவல்துறையினர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, முகமது ரைஹானைக் கைது செய்தனர்.
நாதாபுரம் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 13 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவுற்று தீர்ப்பளித்த நீதிபதி தேவன் கே.மேனன், சிறுமியை பலாத்காரம் செய்த முகமது ரைஹானுக்கு 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2.10 லட்சம் அபராதம் விதித்தார்.

