டெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட குறைந்தது அறுவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர்.
இவ்விரு சம்பவங்களிலும், குளிரைப் போக்குவதற்காக அவர்கள் தீ மூட்டியதாகச் சொல்லப்பட்டது.
டெல்லியில் குளிர் வாட்டி வரும் நிலையில், அங்கு இவ்வகையில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.
வடக்கு டெல்லியிலுள்ள ஒரு வீட்டில், கணவன், மனைவி, ஏழு மற்றும் எட்டு வயது நிரம்பிய இரு குழந்தைகள் என நால்வர் இறந்துகிடந்தனர். அவர்களின் வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
குளிர்காய்வதற்காக அவர்கள் தீ மூட்டியதாகவும் அதனால் கிளம்பிய புகையால் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, டெல்லியின் மேற்குப் பகுதியான இந்திரபுரியில் நிகழ்ந்த இன்னொரு சம்பவத்தில் இருவர் மாண்டுவிட்டனர். நேப்பாளத்தைச் சேர்ந்த அவ்விருவரும் தன்னுணர்வற்ற நிலையில் ஒரு வீட்டில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வீட்டில் ஒரே ஒரு சன்னல்தான் இருந்தது என்றும் அதுவும் மூடியிருந்தது என்றும் கூறப்பட்டது.
ராம் பகதூர், 57, அபிஷேக், 22, என்ற அவ்விருவரும் விரைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆயினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இறந்துவிட்டனர். இருவரது உடலிலும் ஒரு காயமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.