காதலித்தபோது திருமணம் செய்துவைக்க மறுத்துவிட்டு, காதலர்கள் இருவரும் உயிரை மாய்த்துக்கொண்ட பிறகு அவர்களது சிலைகளுக்கு அவர்களுடைய பெற்றோர் திருமணம் செய்துவைத்த சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அந்த மாநிலத்தின் தாபி எனும் பகுதியில் கணேஷ்-ரஞ்சனா ஜோடி காதலித்து வந்தனர். தங்களது காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதத்திற்காக அவர்கள் காத்திருந்தனர்.
ஆனால், இருவரின் பெற்றோரும் அவர்களின் காதலை ஏற்கவே இல்லை. இதனால் மனமுடைந்த காதலர்கள் இருவரும் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
கணேஷ்-ரஞ்சனா ஜோடி ஒன்றுசேர்ந்து வாழ முடியாமல் போனதற்கு தாங்கள்தான் காரணம் என வருந்திய இருவரின் குடும்பத்தினரும், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர்களது சிலைகளை தத்ரூபமாக செய்து அவற்றுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர்.
இறந்தவர்களின் ஆன்மா அமைதிகொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற தாங்கள் இவ்வாறு செய்ததாக அவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த ஜோடி உயிருடன் இருந்தபோதே அவர்களைச் சேர்த்துவைக்காமல் இறந்த பிறகு சிலை செய்து திருமணம் செய்துவைக்கப்பட்ட இந்தச் சம்பவம் தாபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.