விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 65 அடி உயர, சிலை வடிவ திரிசூலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள கைலாசகிரி, மக்களைக் கவர்ந்த சுற்றுலாத்தலமாகும். அங்கு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி சிலைகளைக் காண நாள்தோறும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கைலாசகிரிக்குப் பெருமை சேர்க்கும் வகையில், விசாகப்பட்டினம் நகர வளர்ச்சிக் கழகம் அங்கு 65 அடி உயரத்தில் உடுக்கையுடன் கூடிய திரிசூலம் சிலையை நிறுவியுள்ளது. நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் திரிசூலத்தைக் காண முடியும்.
கடந்த எட்டு மாதங்களாக சிலை வடிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஆந்திர மாநிலக் கல்வி அமைச்சர் நாராயணா அதைப் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைத்தார்.
இரவு நேரத்தில் விளக்கு அலங்காரத்தில் திரிசூல சிலை அழகாக ஜொலித்து பிரமிப்பை ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
65 அடி உயரம் கொண்ட திரிசூலத்தில் உடுக்கை மட்டும் 18 அடி அகலமும் 10 அடி உயரமும் கொண்டுள்ளது.
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் புனரமைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை நாம் கொண்டாடும் வேளையில், கைலாசகிரியில் 65 அடி உயர திரிசூலம் அமைக்கப்பட்டிருப்பது ஆந்திராவுக்குப் பெருமை தரும் விஷயம் என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் நாராயணா.

